பெரா வழக்கு- சசிகலா மீது நடவடிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி
ென்னை:
அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் (பெரா) கீழ் சசிகலா, சுதாகரன், இளவரசி, பாஸ்கர் ஆகியோர் மீது மத்திய அமலாக்கப் பிரிவு போலீசார் கடந்த 1995ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 2002ம் ஆண்டு பெரா சட்டத்தை பெமா சட்டமாக மத்திய அரசு மாற்றியது. இதையடுத்து பெரா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சசிகலா மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சசிகலா. அந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில், பெரா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தொடர்ந்து நடத்தலாம் என்று பெமா சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே சசிகலா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்தது சரியானதுதான். சசிகலா மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.