போன் ஒட்டுக்கேட்பு: முழு விசாரணை தேவை-ராமதாஸ்
சென்னை:
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் விசாரணை வரம்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. வரம்பை முழுமையாக விரிவுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு பிரச்னையில் விசாரணை குழுவுக்கு உடனடியாக முதல்வர் உத்தரவிட்ட வேகம் பாராட்டத்தக்கது. ஆனால் விசாரணை குழுவின் விசாரணை வரம்பு பெரும் ஏமாற்றத்தை தருகிறது.
மொத்த குற்றச்சாட்டுக்கும் ஒரு வழியாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். ஆனால் தலைமை செயலருக்கும், காவல் துறை அதிகாரிக்கும் இடையே நடந்த ஒட்டுக் கேட்பு மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது முதல்வரின் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதையே காட்டுகிறது.
இப்போது தொலைபேசியை ஒட்டுகேட்பது எவ்வளவு எளிது என்பதற்கு முதல்வர் எந்த பத்திரிகையை சுட்டிக் காட்டினாரோ, அதே பத்திரிகையில், தொலைபேசி ஒட்டுகேட்பது என்பது திமுக ஆட்சியில் அன்றாட வாடிக்கை என்று தொலைபேசித் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ள அதிர்ச்சி செய்தியும் வந்துள்ளது.
இந்த நிலையில் என் தொலைபேசியும் பாமகவின் முன்னணி தலைவர்கள் மற்றும் சில தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்படுவதாக வெளியான செய்தியை வெறும் மறுப்புடன் முடித்துவிடக் கூடாது. இதுகுறித்தும் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
எனவே ஒரு நபர் விசாரணைக் குழுவின் வரம்பை விரிவுப்படுத்த வேண்டும். தொலைபேசி ஒட்டுகேட்பது தொடர்பான எல்லா புகார்களையும் ஒட்டு மொத்தமாக விசாரித்து உண்மையை கண்டறிந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுகேட்க யார் உத்தரவிட்டது அல்லது உத்தரவு இல்லாமலேயே காவல் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் ஆர்வக்கோளாறால் ஒட்டுக்கேட்கப்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும்.
இப்படி முழுமையாக விசாரணை நடத்தாவிட்டால், விசாரணைக் குழு ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்று கருதத் தோன்றும். அதற்கு அரசு இடம் கொடுக்கக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.