ஐபிஎல் முதல் மோதல்: பெங்களூரை சுருட்டியது கொல்கத்தா!

இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் அமைப்பின் முதலாவது டுவென்டி 20 போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
இந்தப் போட்டியில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், திராவிட் தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற திராவிட் முதலில் ரைடர்ஸை பேட்டிங் செய்ய கூறினார். 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை கோல்கத்தா ரைடர்ஸ் அதிரடியாக குவித்தது.
பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணியில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கும்ப்ளே, தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆகியோர் நேற்று விளையாடவில்லை. இதனால் திராவிட் அணி பந்து வீச்சில் வீரியம் இல்லை.
இந்த நிலையில் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய நியூசிலாந்து வீரர் மெக்கல்லத்தின் சூறாவளி ஆட்டத்தால் மைதானமே அதிர்ந்தது.
73 பந்துகளில் 9 பவுண்டரிகள் 14 மெகா சிக்ஸர்களை அடித்து 158 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் மெக்கல்லம். அவருக்கு முன்பு திராவிட் அணியின் பந்து வீச்சாளர்கள் ஒன்றுமில்லாமல் போய் விட்டனர்.
கங்குலி 10, ரிக்கி பாண்டிங் 20, ஹுசே 12 ரன்களுடன் அவுட்டானார்கள்.
இறுதியில் 20 ஓவர்களில் 222 ரன்களை ரைடர்ஸ் அணி குவித்தது.
இதைத் தொடர்ந்து சாலஞ்சர்ஸ் பேட்டிங் செய்தனர். முதல் ஓவரிலேயே, இஷாந்த் பந்து வீச்சில் கேப்டன் திராவிட் ரன் எதுவும் எடுக்காமல் 'டக்' அவுட் ஆனார்.
தொடர்ந்து ரைடர்ஸ் பந்துவீச்சில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. 9வது விக்கெட் பேட்ஸ்மென் பிரவீன் மட்டும் 19 ரன்கள் எடுத்து இரட்டை இலக்கத்தை எட்டினார்.
முடிவில் 15.1 ஓவரில் வெறும் 82 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது பெங்களூர் அணி.
ரைடர்ஸ் அணியின் பௌலர் அகார்கர் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறித்தார். கங்குலி, அசோக் டிண்டா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.












Click it and Unblock the Notifications