ஜெ. உத்தரவு - இன்று தமிழகம் முழுவதும் விளக்கேற்றும் அதிமுக
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி இன்று தமிழகம் முழுவதும் மாலை 6.30 மணிக்கு அதிமுகவினர் விளக்கேற்றி வைத்து, இருண்ட தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா என்று கோஷமிடவுள்ளனர்.
சமீபத்தில் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதில், தமிழகம் திமுக ஆட்சியில் இருளில் மூழ்கிக் கிடப்பதாகவும், எனவே சித்திரா பவுர்ணமி தினத்தன்று மாலை 6.30 மணிக்கு அதிமுகவினர் தங்களது வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
விளக்கேற்றி வைத்து இருண்ட தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா என்று முழக்கமிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
குத்து விளக்கு அல்லது அகல் விளக்கு அல்லது காமாட்சி விளக்கு என ஏதாவது ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதன்படி இன்று மாலை விளக்கேற்றி வைத்து முழக்கமிட அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.