கிரீமி லேயரை சேர்க்க சட்டரீதியான நடவடிக்கை - திமுக தீர்மானம்

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் கிரீமி லேயரை இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வர சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியதையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் இந்த குழு வரவேற்கிறது. இதில் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை (கிரீமி லேயர்) விலக்க வேண்டும் என்பது உறுத்தலாக அமைந்துவிட்டது.
பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை இடஒதுக்கீட்டில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற அம்சத்தை விலக்கி பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் பாகுபாடின்றி இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்க எல்லா முயற்சிகளையும் சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டும்.
27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைபடுத்த மத்திய அரசை இந்த குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.
பின்னர் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தாண்டு முழுமையான இடஒதுக்கீடு கிடைக்காது என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருப்பது குறித்து நானும் படித்தேன். தீர்மானத்தில் உள்ளதை நாங்கள் வலியுறுத்துவோம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து கட்சி நிர்வாகிகள், வக்கீல்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம். வழக்கை திமுக தாக்கல் செய்வதா அல்லது வேறு முறையில் தாக்கல் செய்வதா என்பது குறித்து முடிவெடுப்போம். இப்போது இந்த தீர்மானத்தை மத்திய அரசிடம் வைக்கிறோம்.
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு எங்களுடன் ஒத்துப்போக முயற்சிக்கிறது. எங்கள் குறிக்கோளை விட்டுத்தர மாட்டோம்.
ஓரளவு முன்னேறியவர்கள், பிராமணர்களில் உள்ள ஏழைகள், வேறு ஜாதியினர், பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் குடும்பத்தில் உள்ள முதல் பட்டதாரிக்கு உதவ நான் முதல்வராக இருந்தபோது முதல் பட்டதாரிக்கு 5 மதிப்பெண் அதிகம் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்ட ஒரு அரசாணை வெளியிட்டேன். அதனால் 500 பேர் பயனடைந்தனர். ஆனால் சிலர் நீதிமன்றம் சென்று அதை ரத்து செய்துவிட்டனர்.
இந்த ஆண்டே கிரீமி லேயரை சேர்க்க முடியுமா என யோசிப்போம். முயற்சிப்போம். இந்த ஆண்டே அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் என் ஆசை. அப்படி முடியாத சூழல் ஏற்பட்டாலும் இடஒதுக்கீட்டை விடமாட்டோம் என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications