பூக்கள் விலை கிடுகிடு வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
புளியங்குடி: நெல்லை மாவட்டத்தில் மல்லிகை மற்றும் ரோஜா ஆகிய பூக்களின் விலை பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவிலுக்கு அடுத்தப்படியாக புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மல்லிகை, கேந்தி, சம்பங்கி, கனகாம்பரம், செவ்வரளி ஆகிய பூக்களை விவசாயிகள் பெருமளவு பயிரிடுகின்றனர். பூக்களை விவசாயிகள் டி.என்.புதுக்குடியில் உள்ள பூ மார்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் மற்றும் முகூர்த்த நாள் மற்றும் கோவில் திருவிழா காலங்களில் பூக்கள் விலை விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும். மற்ற காலங்களில் பூக்கள் விலை வீழ்ச்சியடையும்.
முகூர்த்த நேரங்களில் 10 கிராம் மல்லிகை பூ ரூ.50க்கு விற்பனையாகும். 100கிராம் கனகாம்பம் ரூ.100 வரை விற்பனையாகும். இந்நிலையில் கடந்த வாரம் 10 கிராம் மல்லிகை பூ ரூ.10 என வீழ்ச்சியடைந்தது.
இரண்டு தினங்களுக்கு முன் 400 கிராம் மல்லிகை பூ வெறும் ரூ.7க்கு விற்பனையானது. இதேபோல் 10 ரோஜா கொண்ட பாக்கெட் ரூ.20க்கு விற்பனையானது. தற்போது ரூ.5க்கு விற்பனையாகிறது.
பூக்களின் விலையில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications