பயணிகளுக்கு பாதுகாப்பு - ரயில்களில் கமாண்டோ படை
கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆயுதம் ஏந்திய கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில்வே எஸ்பி சாரங்கன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இதை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சாரங்கன் கூறுகையில், கோடை விடுமுறை என்பதால் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. சமுக விரோதிகளும், கொள்ளையர்களும் இதை பயன்படுத்திக் கொண்டு பயணிகளிடம் கொள்ளையில் ஈடுபடுவார்கள்.
இதை தடுக்கும் வகையில் ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர் ரயில்களில் அதிரடி சோதனை செய்வார்கள். அவர்களுக்கு ஏகே 47 போன்ற நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அவசியம் ஏற்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளையர்களை பிடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கம்போல ரயில்வே பாதுகாப்பு படையும், ரயில்வே போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
குற்றங்களை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையுடன் மாவட்ட போலீசாரும் இணைந்து செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.