சத்தியமூர்த்தி பவனுக்கு பாதுகாப்பு கேட்டு காங். மனு
சென்னை: காங்கிரஸ் கோஷ்டிப் பூசலால் வன்முறை ஏற்படலாம் என்ற அச்சத்தில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு காங்கிரஸ் கட்சி விண்ணப்பித்துள்ளது.
சமீபத்தில் கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். முன்னாள் அமைச்சர் பிரபுவின் ஆலோசனையின் பேரில் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது. மாற்றப்பட்டவர்கள் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்.
நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் கோவையில் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிக்கக் கூடும் என்று தெரிகிறது.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு கோரி காங்கிரஸ் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணா நிலைய காவல் நிலையத்தில் காங்கிரஸ் தலைமை நிலைய செயலாளர் ராஜன் ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில் கோவை மாவட்ட தலைவர்கள் மாற்றத்தை எதிர்த்து அங்கு ஒரு தரப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதேபோல சத்தியமூர்த்தி பவனுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ அவர்கள் போராட்டம் நடத்தக் கூடும் எனத் தெரிகிறது.
எனவே இங்கு உண்ணாவிரதம் நடப்பதைத் தடுக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவன் கடந்த காலங்களில் பல போராட்டங்கள், வன்முறைகள், மோதல்களைச் சந்தித்துள்ளது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாரை ஒரு கோஷ்டியினர் உள்ளே புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவமும் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications