பேச அனுமதி இல்லை-சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு
சென்னை: உடுமலைப்பேட்டையில் நடந்த திமுக தேர்தலின்போது நடந்த வன்முறை தொடர்பாக பேச அனுமதி தரப்படாததைக் கண்டித்து சட்டசபையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இன்று சட்டசபையில் பூஜ்ய நேரத்தின்போது அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து, உடுமலைப்பேட்டையில் நடந்த திமுக உட்கட்சித் தேர்தலின்போது மோதல் ஏற்பட்டது. அப்போது டி.எஸ்.பி ஈஸ்வரனை திமுகவினர் சிலர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து விவாதிக்க உடுமலைப்பேட்டை அதிமுக உறுப்பினர் சணமுகவேல் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். அதிகுறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.
ஆனால் பன்னீர் செல்வம் தொடர்ந்து பேச சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதிக்க மறுத்து அமருமாறு கூறினார். இது உள்கட்சி விவகாரம். இதுகுறித்து இங்கு பேச அனுமதிக்க முடியாது என்றார்.
தீர்மானத்தை விரைவாக எடுக்குமாறு சபாநாயகரை உறுப்பினர்கள் வலியுறுத்த முடியாது. அது சபாநாயகரின் உரிமை என்றும் கூறினார்.
அப்போது எழுந்த நிதியமைச்சர் அன்பழகன், கட்சிப் பிரச்சினைகளை விவாதிக்கும் களமாக சட்டசபையை மாற்றக் கூடாது. அதற்கு சபாநாயகரும் அனுமதிக்கக் கூடாது என்றார்.
இதையடுத்து அதிமுகவினர் தொடர்ந்து கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். ஆனால் அதிமுகவினருக்கு பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதையடுத்து திமுக ஆட்சியில் போலீஸாருக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்று கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டபடி வெளிநடப்பு செய்தனர்.