சிறையில் தமிழர்கள்: இந்தியா ஒத்துழைக்க மலேசிய அமைச்சர் கோரிக்கை
திருச்செந்தூர்: மலேசிய சிறையில் வாடும் தமிழர்களை மீட்க இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்று மலேசிய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் பிரதமர் படாவி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரே கேபினட் அமைச்சரான சுப்ரமணியம், தனது மனைவி, இரு மகள்களுடன் தமிழகம் வந்துள்ளார்.
திருச்செந்தூர் வந்த அவர் அங்குள்ள முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மலேசியாவிற்கு முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் வருகை தந்த தமிழர்கள் சிறையிலும், காப்பகங்களிலும் உள்ளனர்.
ஏமாற்றப்பட்ட தமிழர்களை கண்டறிந்து அவர்களை தாய் நாட்டிற்கு திரும்ப மலேசிய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இப் பிரச்சனையில் இந்திய தூதரக அதிகாரிகள் ஒத்துழைப்பு தான் அவசியம்.
இந்தியர்கள் என அடையாளம் காணப்படுவர்களை உடனடியாக இந்தியா திரும்ப அனுமதிக்கிறோம். யாரையும் நீண்ட காலத்திற்கு சிறையில் அடைக்க நாங்கள் நினைப்பதில்லை என்றார்.