கொடைக்கானல்: நக்ஸல்களுக்கு உதவிய கேரள வாலிபர் கைது
கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் நக்ஸலட்டுகள் தங்க இடம் தந்து, ஆயுதங்கள் வாங்கவும் உதவிய கேரளாவைச் சேர்ந்த வாலிபர் பிடிபட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன் கொடைக்கானல் மலைப் பகுதியில் அதிரடிப்படை போலீசார் நடத்திய வேட்டையில் நவீன் பிரசாத் என்ற நக்ஸலைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், தர்மபுரி மாவட்டம் மூக்கனூரை சேர்ந்த பெண் டாக்டர் மீனாட்சி உள்பட 10 பேர் தப்பியோடிவிட்டனர்.
இவர்களைப் பிடிக்க அதிரடிப்படை போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் அருங்கானாறு மலைப் பகுதியில் நடந்த தேடுதலின்போது ஜார்ஜ் புஷ், சுரேஷ் ஆகியோர் பிடிபட்டனர்.
இதில் ஜார்ஜ் புஷ் (27) நக்ஸல்கள் தங்கவும் ஆயுதங்கள் வாங்கவும் உதவியவர் என்று தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவரான ஜார்ஜ் புஷ் தந்த தகவலின் அடிப்படையில் கொடைக்கானலில் நக்ஸல்கள் தங்கி இருந்த இடத்தை அதிரடிப்படை போலீசார் சோதனையிட்டனர்.
துப்பாக்கி-குண்டுகள் பறிமுதல்:
அங்கு 8 எம்.எம். துப்பாக்கி, 3 பைப் வெடிகுண்டுகள், 3 கையெறி குண்டுகள், 2 டிரான்சிஸ்டர்கள், மாத்திரைகள், பேண்டேஜ்கள், கூடாரம் அமைக்க பயன்படும் தார் பாய்கள், அரிசி, பாத்திரங்கள், தட்டுகள், சீருடைகள் ஆகியவை சிக்கின.
ஜார்ஜிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
டாக்டர் லட்சுமி:
தப்பிச் சென்ற நக்ஸல்களில் உள்ள மீனாட்சி என்பவர் ஒரு டாக்டர் ஆவார். ஒரு டாக்டரே நக்ஸல் இயககத்தில் இணைந்திருப்பது குறித்து தமிழக க்யூ பிராஞ்ச் போலீசார் அதிர்ந்து போயுள்ளனர்.
நவீன் உடல் அடக்கம்-ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி:
இதற்கிடையே சுட்டு கொல்லப்பட்ட நக்சலைட் நவீன் பிரசாதின் உடல் அவரது சொந்த ஊரான தர்மபுரியை அடுத்த மூக்கனூரில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக தர்மபுரி கொண்டு வரப்பட்ட நவீன் பிரசாத்தின் உடலுக்கு ஒளவையார் மேல்நிலைப் பள்ளி அருகிலும், ராஜாபேட்டையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது போலீசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. பின்னர் ராஜாபேட்டையிலிருந்து இடுகாட்டுக்கு நவீனின் உடல் கொண்டு செல்லப்பட்டபோது நக்சல்களின் ஆதரவாளர்கள், உறவினர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.
இது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை போலீசார் வீடியோ எடுத்து பதிவு செய்து கொண்டனர்.
மேலும் மூக்கனூர், செம்மனஅள்ளி ஆகிய கிராமங்களில் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications