முறையான விதிகளின்படி நடந்த பிரியங்கா-நளினி சந்திப்பு!
வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளி நளினியை பிரியங்கா சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்ட விதிகளை மீறி நளினியை பிரியங்கா சந்தித்தாக சர்ச்சை கிளம்பியது. பிரியங்கா வேலூர் பெண்கள் சிறைக்குள் வந்தது பார்வையாளர் குறிப்பேட்டில் பதிவு செய்யப்படவில்லை. இது சட்ட விதிகளை மீறிய செயல் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் முழுக்க முழுக்க சிறை விதிகளை பின்பற்றித்தான் நளினியை பிரியங்கா தந்தித்தார் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பே நடக்கவில்லை என்று முதலில் சிறைத்துறை அதிகாரிகள் முழுப் பூசணிக்காயை மறைக்க முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சிக்கல் எழுந்துவிட்டதால் இந்த சந்திப்பை முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
பிரியங்கா-நளினி சந்திப்பு சட்டவிதிப்படி தான் நடந்தது என்று அதிகாரிகள் ஜெயில் சட்ட விதிகள் புத்தகத்தை காட்டி விளக்கம் தந்தனர். அதன்படி,
கைதியை ஒரு பார்வையாளர் சந்திக்க அனுமதி தர ஜெயில் கண்காணிப்பாளருக்கு முழு அதிகாரம் உண்டு. அவருடைய அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது.
தூக்குத்தண்டனை கைதியாக இருந்தால் மட்டுமே, அவரை பார்வையாளரை சந்திக்க வைக்கும் விஷயத்தில் அரசின் ஒப்புதலை கண்காணிப்பாளர் பெற வேண்டும். மற்ற கைதிகளை, பார்வையாளர்கள் சந்திப்பதற்கு சம்பந்தப்பட்ட கைதிகளின் விருப்பம் இருந்தால் மட்டும் போதும்.
ஜெயில் கண்காணிப்பாளரே இந்த விஷயத்தில் முடிவு எடுக்கலாம். ஜெயில் சட்ட விதி 526(2)ன் படி தண்டனை கைதி ஒருவரை, பார்வையாளர் சந்திப்பதை பார்வையாளர் குறிப்பேட்டில் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.
கண்காணிப்பாளர் தனது ரகசிய குறிப்பேட்டில் மட்டும் பதிவு செய்து கொண்டால் போதும். இந்த சந்திப்பு பற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. மேலும், பார்வையாளர், குறிப்பிட்ட கைதியை சந்திப்பதற்கு எழுத்துப்பூர்வமாக அனுமதி கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. வாய்மொழியாகவே அனுமதி கேட்டாலே கண்காணிப்பார் அதை அனுமதிக்கலாம்.
விதி 529(4)ன் படி மிக மிக முக்கிய பிரமுகர்கள் தண்டனைக் கைதியை, சிறையின் எந்த பகுதியிலும் சந்தித்துப் பேச அனுமதிக்கலாம். பார்வையாளர் கூடத்தில்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை.
இந்த விதிகளின்படி தான்இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்புக்குரிய பிரியங்கா கண்காணிப்பாளரின் அறையில் வைத்து நளினியை சந்தித்துப் பேச அனுமதி தரப்பட்டது.
பிரியங்கா வாய்மொழியாக கேட்டுக்கொண்டதற்கிணங்க, கண்காணிப்பாளர் தனது அதிகாரத்தின் கீழ் அனுமதி வழங்கினார் என்றனர்.
விடுதலை கோருவாரா நளினி?:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தூக்கு தண்டனை பெற்ற நளினிக்கு சோனியாவின் கருணையால் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ஆயுள் தண்டனை கைதிகள் பொதுவாக அதிகபட்சமாக 14 ஆண்டுகள் தான் சிறை தண்டனை அனுபவிக்கும் முறை உள்ளது. ஆனால், நளினி 17 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார்.
இதனால் நளினியின் விடுதலைக்கு அவரது வழக்கறிஞர்கள் முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி விண்ணப்பித்தால் அது தொடர்பான ஆலோசனை கமிட்டி பரிசீலித்து முடிவு செய்யும். இந்த கமிட்டியில் மாவட்ட கலெக்டர், நீதிபதி போன்றோர் உறுப்பினர்களாக இருப்பர்.