டாஸ்மாக்கில் போலி மது சப்ளை-6 அதிமுகவினர் கைது
கரூர்: கரூர் மாவட்டத்தில் போலி மதுபானங்களை சப்ளை செய்த அதிமுக நிர்வாகிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக திருச்சி டிஐஜி அசோக்குமார்தாஸ் விசாரணைக்கு உத்தரவிட்டதோடு கரூர் சென்று அதிரடி சோதனையிலும் இறங்கினார்.
அப்போது தாந்தோனிமலையில் ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 576 போலி மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை வினியோகம் செய்ய பயன்படுத்தப்பட்ட கார், பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலாளர் தானேஷ், நகர மாணவர் அணி அமைப்பாளர் கோல்ட் ஸ்பாட் ராஜா, தாந்தோணி நகர செயலாளர் ராயனூர் ரவி, மற்றும் அதிமுக நிர்வகிகள் முத்துகுமார், ராமலிங்கம், சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் தமிழகம் முழுவதும் இவர்கள் போலி மதுபானங்களை சப்ளை செய்தது தெரிய வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி டிஐஜி அசோக்குமார் தாஸ் தலைமையிலான போலீசார் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்த 40க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.