தமிழகத்தில் அதிகரிக்கும் பி.இ சீட்கள்-ஓரளவு மதிப்பெண் இருந்தாலே சீட்
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூவில் ஓரளவு நல்ல மதிப்பெண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்குமே பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 20 சதவீத மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். 5 சதவீதத்தினர் எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவக் கல்விகளில் சேர்ந்தனர்.
தமிழகத்தில் 11 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளும் 261 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளும் உள்ளன. இங்குள்ள மொத்த இடங்கள் 1.03 லட்சமாகும். இதில் கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 65,000 இடங்கள் இருந்தன.
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இந்த இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக மார்க்குகள், கவுன்சிலிங், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனாலும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இருந்த 65,000 இடங்களில் 10,000 இடங்கள் காலியாகவே இருந்தன.
அதே போல தனியார் கல்லூரிகளிலும் பல ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை.
பொறியியல் கல்லூரிகளில் சேர கவுன்சிலிங்குக்கு வந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் சேர விருப்பம் தெரிவித்தது ஐடி, கம்ப்யூட்டர்ஸ் தொடர்பான படிப்புகளில் தான்.
இந் நிலையில் தமிழகத்தில் மேலும் என்ஜினீயரிங் கல்லூரிகளை தொடங்க நூற்றுக்கும் அதிகமானோர் இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் இந்த ஆண்டு எத்தனை பேருக்கு கல்லூரிகள் தொடங்க அனுமதி தரப்படும் என்று தெரியவில்லை. ஆனால், இதில் 25 புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தரப்பட்டால் கூட தமிழகத்தில் பொறியியல் கல்வி இடங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும். இதன் மூலம் அரசு ஒதுக்கீட்டு கோட்டாவிலும் எண்ணிக்கை அதிகமாகும்.
இதன்மூலம் பிளஸ் டூவில் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண் எடுத்தாலே பொறியியல் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைப்பது அதிகரிக்கும்.
சென்ற ஆண்டு 10,000 இடங்கள் காலியாக இருந்ததை கணக்கில் கொண்டால் இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் அனைவருக்குமே பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications