வேலூரில் இந்த ஆண்டே சட்டக் கல்லூரி-துரைமுருகன்
சென்னை: வேலூரில் இந்த ஆண்டே சட்டக் கல்லூரி தொடங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில் நீதி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய அதிமுக எம்எல்ஏ ஞானசேகரன், ராஜீவ் கொலையாளி பிரபாகரன் மீதான பிடிவாரன்ட், வைகோ மீதான வழக்கு ஆகியவை எந்த நிலையில் உள்ளன.
வேலூரில் சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்று ஆலடி அருணா சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது அறிவித்தார். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் இதுவரை எடுக்கப்படவில்லை. சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வக்கீல்கள் நல நிதி தொடங்கப்பட்டு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது. அதற்கு மேல் எந்த ஒதுக்கீடும் இல்லை. வக்கீல்கள் இறந்தால் வழங்கப்படும் நிவாரண நிதியை ரூ.1 லட்சத்தில் இருந்த 5 லட்சமாக உயர்த்த வேண்டும். அதற்காக ரூ.50 கோடியை ஒரே முறையாக உயர்த்த வேண்டும்.
புதிய நீதிமன்றங்கள் தொடங்கும்போது, உள்ளூர் எம்எல்ஏ, எம்பிக்களுக்களை அழைக்க வேண்டும் என்ற அரசாணை பின்பற்றப்படுவதில்லை. நீதித்துறையில் லஞ்சம்-ஊழலை ஒழிக்கப்பட வேண்டும் என்று ஞானசேகரன் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், வேலூரில் இந்த ஆண்டே சட்டக் கல்லூரி தொடங்கப்படும். புதிய நீதிமன்றம் வேண்டும் என்று சண்டை போட்டு அனுமதி பெறுவது, இடம் தேர்வு செய்யவும், கட்டடம் கட்ட உதவுவதும் எம்எல்ஏக்கள்தான். இவ்வளவு செய்யும் எம்எல்ஏவை திறப்பு விழாவுக்கு வராதே என்றால், நானும் ஒரு எம்எல்ஏ என்ற முறையில் உள்ளம் பாதிக்கிறது.
உச்ச நீதிமன்றக் கிளை தமிழகத்துக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இன்று இல்லாவிட்டாலும் நிச்சயம் ஒரு நாள் தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமைய வேண்டும். அதற்காக இந்த அரசு பாடுபடும் என்றார்.












Click it and Unblock the Notifications