மே 10 முதல் என்ஜினியரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள்
நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல்,
2008-09ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 10ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை வழங்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்குரிய விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
மாணவர்களின் நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த முறை விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, திருச்சி, நெல்லை, கோவை அண்ணா பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள் ஆகிய இடங்களிலும் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
வங்கிகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படாது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தபால் மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் விண்ணப்பங்களை பெறலாம்.
சமர்பிக்க கடைசி நாள் ஜூன் 25:
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 25ம் தேதி மாலை 5.30 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும். விண்ணப்ப கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.500. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250.
சென்னையில் மட்டுமே கவுன்சிலிங்:
கவுன்சிலிங் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சென்னையில் மட்டும் நடைபெறும்.
கவுன்சிலி்ங்குக்கு பஸ் கட்டண சலுகை:
கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும் உடன் வரும் ஒருவருக்கும் பஸ் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.
5 புதிய கல்லூரிகள்-அதிக இடங்கள்:
கடந்த ஆண்டு சுமார் 10,000 என்ஜினீயரிங் சீட்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு மேலும் புதியதாக 5 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதால் இன்னும் கூடுதலான இடங்கள் கிடைக்கும்.
மொத்த இடங்கள் எவ்வளவு, கட்டணம் போன்ற தகவல்கள் சட்டசபையில் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும்போது தெரிவிக்கப்படும் என்றார் பொன்முடி.
அப்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விஸ்வநாதனும் உடனிருந்தார்.
சிறுபான்மையினர் உதவித் தொகை திட்டம்:
இதற்கிடையே சிறுபான்மை மாணவ-மாணவிகள் 1,312 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்குத் தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் 2007-08ம் ஆண்டில் இருந்து மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்திலுள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்குப் படிப்புக் கட்டணம் முழுமையாகவும், பராமரிப்புக் கட்டணம் மாதமொன்றுக்கு விடுதி மாணவர்களாக இருந்தால் தலா ரூ.1,000 வீதமும், விடுதியில் தங்காமல் பயிலும் மாணவர்களாக இருந்தால் ரூ.500 வீதமும் 10 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
இதர கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்குப் படிப்புக் கட்டணம் தலா ரூ.20,000 அல்லது அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம், இதில் எது குறைவோ, அந்தத் தொகையுடன் பராமரிப்புக் கட்டணமும் வழங்கப்படும். இச்சலுகை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்து மிகாமல் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவோர் எண்ணிக்கையில் 30 சதவீதம் அளவுக்கு பெண்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். கிருஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 913 மாணவ, மாணவியருக்கும், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த 399 மாணவ, மாணவியருக்கும் என மொத்தம் 1,312 சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு ரூ.3.5 கோடி கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை கிரசன்ட் பொறியியல் கல்லூரி, டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த சிறுபான்மைச் சமுதாய மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகைகளுக்கான காசோலைகள் வழங்கி முதல்வர் கருணாநிதி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார் என்று கூறப்பட்டுள்ளது.