சங்கரநாராயணர் கோயில் கும்பாபிஷேகம்-லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அரியும், சிவனும் ஒன்றென காட்சியளிக்கும் இந்த ஸ்தலம் சூரியன் வழிபட்ட தலமாகும். இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து கடந்த 20ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நாடி சந்தனம், பர்சாஹுதி, மகாபூர்ணஹூதி, யாத்ராதானம், ஆகியவையும் காலை 5 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது.
பின்னர் 5.50 மணிக்கு ராஜகோபுரத்தின் 9 கலசத்திலும், புனித நீர் ஊற்ற சாமி விமானம், சங்கர நாராயணர் சாமி விமானம், அம்மன் விமானம், சண்முகர் விமானம், மேற்கு, தெற்கு, கிழக்கு, சொர்க்க வாசல் கோபுரங்கள் ஆகிய 9 கோபுரங்களிலும் செண்டை மேளம் முழங்க வேதங்கள் முழங்க ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் பிரகாஷ், அவரது மனைவி சிந்துஷா, நீதிபதி பழனிவேல் ராஜன், மாஜிஸ்திரேட் சந்திரா பார்த்தசாரதி, மதுரை ஆதீனம் அருணகிரி நாத சுவாமிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தைக் கண்டு பரவசமடைந்தனர்.












Click it and Unblock the Notifications