மாநிலம் முழுவதும் ஒரே தொலைபேசி எண்ணில் ஆம்புலன்ஸ் சேவை
சென்னை: மாநிலம் முழுவதும் ஒரே தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து அவர் கூறியதாவது:
அவசர மருத்துவ சிகிச்சைக்கு தமிழகம் முழுவதும் ஒரே தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாகப் பெற, புதிய திட்டம் இந்த ஆண்டில் தொடங்கப்படும். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் இந்த ஆம்புலன்ஸ்கள் சேவை கட்டுப்படுத்தப்படும்.
இந்த ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஆம்புலன்ஸ் சேவையுடன் காவல் துறை மற்றும் தீயணைப்புப் படையினரின் பணிகளும் ஒருங்கிணைக்கப்படும்.
இயற்கை சீற்றங்கள் மற்றும் பெரும் விபத்துகளில் அதிகமான எண்ணிக்கையில் பாதிக்கப்படுவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க சிறப்பு மையம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும். மலைவாழ் மக்களுக்காக இந்த ஆண்டு 139 நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்படும்..
அரசு மருத்துவமனைகளின் குறைகளைக் களையவும், செயல்பாடுகளை கவனிக்கவும், 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அறிமுகப்படுத்தப்படும்.
சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆண்டு 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 10 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.10 கோடி மதிப்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் வழங்கப்படும். வேலூர் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டில் தொடங்கப்படும்.
2008-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 6.7 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய மக்கள் தொகையில் 6 சதவீதம் ஆகும் என்று அந்த குறிப்பில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.