தடுப்பூசி-குழந்தைகள் சாவுகள்- 4 நர்ஸுகள் சஸ்பெண்ட்
சென்னை: தட்டம்மை தடுப்பூசி போட்டதில் பலியான நான்கு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு தர முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் அருகே நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்பட்ட நான்கு பச்சிளம் குழந்தைகள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தன.
இந்த சம்பவம் குறித்து சட்டசபையில் இன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தடுப்பூசி போடப்பட்டதால் உடலில் அலர்ஜி ஏற்பட்டு நான்கு குழந்தைகளும் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு மாநிலம் முழுவதும் தட்டம்மை தடுப்பூசித் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மருந்துகளையும் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பியுள்ளோம்.
இந்த மருந்தை மத்திய அரசுதான் வழங்கியது. எனவே மத்திய அரசுக்கும் இதைத் தெரிவித்துள்ளோம். மத்திய அரசும் ஒரு நிபுணர் குழுவை அனுப்புகிறது. அந்தக் குழு வந்து என்ன காரணத்தால் இந்த மருந்துகளால் மரணம் நேர்ந்தது என்பதை கண்டறியும்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு நர்ஸுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வயதுக்குட்பட்ட 276 குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது. திருவள்ளூர் சம்பவத்தைத் தவிர வேறு எங்குமே எந்தப் பிரச்சினையும் எழவில்லை.
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மொத்தம் ரூ. 12 லட்சம் நிவாரண உதவியாக அளிக்கப்படும் என்றார் அமைச்சர்.
முன்னதாக விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக உறுப்பினர் அரி, இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அமைச்சர் பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினார்.