என்ஐடி, ஐஐஐடி நுழைவுத் தேர்வு-8.5 லட்சம் பேர் எழுதினர்
சென்னை: திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரி (என்ஐடி) உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள், ஐஐஐடி உள்ளிட்டவற்றுக்கான நுழைவுத் தேர்வு நடந்தது. அகில இந்தியஅளவில் நடைபெற்ற இந்த தேர்வில் 8.5 லட்சம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கான மாணவர் சேர்க்கை தற்போது மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட் நாடு முழுவதும் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள், ஐஐஐி எனப்படும் இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
2008-09ம் ஆண்டுக்கு, நாடு முழுவதும் உள்ள 36 கல்வி நிறுவனங்களில் மொத்தம் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில் எட்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று இந்தத் தேர்வு நாடு முழுவதும் நடந்தது. சென்னையிலும் தேர்வு நடந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வை எழுதினர்.
கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. தேர்வு பொதுவாக எளிதாக இருந்ததாகவும், கணிதப் பாடம் மட்டும் சற்று கடினமாக இருந்ததாகவும் மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.