சேலம் சிறையில் ஜான் பாண்டியன் திடீர் உண்ணாவிரதம்
சேலம்: சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜான் பாண்டியன் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். இதேபோல அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள தென்காசி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற ஜான் பாண்டியன் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல தென்காசியில் நடந்த கொலைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அலாவுதீன் உள்ளிட்ட 9 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு சிறையில் உள்ள டிவியில் அதிக சத்தம் வைத்து கைதிகள் டிவி பார்த்துள்ளனர். இதற்கு தென்காசி கைதிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜான் பாண்டியன் அறையில் தங்கியுள்ள கண்ணன், பாபநாசம் ஆகியோருக்கும், தென்காசி கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து பாபநாசத்தை வேறு சிறைக்கு அதிகாரிகள் மாற்றினர். இந்த சம்பவம் நடந்தபோது ஜான் பாண்டியன் வழக்கு விசாரணைக்காக நெல்லை கோர்ட்டுக்கு போயிருந்தார்.
திரும்பி வந்த அவர், பாபநாசத்தை மறுபடியும் தனது அறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தில் குதித்தார். அதேபோல ஜான் பாண்டியனை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி தென்காசி கைதிகள் 9 பேரும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இதனால் சேலம் சிறையில் பதற்றம் நிலவி வருகிறது.