நர்கீஸ் புயல் திசை திரும்பியது - தப்பியது தமிழகம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னமான நர்கீஸ், சென்னைக்குக் கிழக்கே 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. இந்தப் புயல் சின்னத்தால் சென்னை உள்ளிட்ட கடலோர தமிழகத்தில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இப்புயல் மேலும் வலுவடைந்துள்ளது. தற்போது வடக்கு நோக்கி நகரத்தொடங்கியுள்ள இப்புயல் சின்னம், வடகிழக்கு நோக்கி தொடர்ந்து நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னைக்கு வந்த புயல் ஆபத்து நீங்கியது. வங்கதேசம், மியான்மரை அது தாக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரும் புயல் - நர்கீஸ்:
நர்கீஸ் புயல் சின்னம் பெரும் புயலாக மாறும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க கடற்படை புயல் எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இது மிகவும் ஆபத்தான புயல் சின்னம். தற்போது 1வது நிலையில் உள்ளது. ஆனால்மேலும் வலுவடைந்து 4வது நிலைக்கு செல்லும். அப்போது அது ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகக் கடுமையாக இருக்கும்.
மியான்மர், வங்கதேசம், மலேசிய அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
அதேசமயம், இந்தியாவின் மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களையும் இந்தப் புயல் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நர்கீஸ் புயல் நகரத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து வங்கதேசத்திலும், மியான்மரிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரா ஆகிய மாநில கடலோரப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications