இரும்பு, ஸ்டீல் மீதான இறக்குமதி வரி ரத்து
டெல்லி: இரும்பு, ஸ்டீல், பால் பவுடர் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவற்றின் விலை குறையும். மொத்தம் ரூ. 1500 கோடி அளவுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுக் கொண்டுள்ளது. இரும்பு, சிமென்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை மிக்க கடுமையாக உள்ளது. இதனால் கட்டுமானத் தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த சிலமுக்கிய நடவடிக்கைகளை சமீபத்தில் எடுத்தது மத்திய அரசு. இந்த நிலையில் மேலும் சில நடவடிக்கைகளை நேற்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.
இதுதொடர்பாக லோக்சபாவில் நேற்று அவர் பேசுகையில், மென் இரும்பு, ராடுகள், பார்கள், இன்கோட்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான இறக்குமதி வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
முறுக்குக் கம்பிகள் மற்றும் கட்டட வேலைகளுக்கான கம்பிகள் மீது தற்போதுள்ள 14 சதவீத இறக்குமதி எதிர் தீர்வை முற்றிலும் நீக்கப்படுகிறது.
உருக்கு தயாரிப்புக்கான மெட்டல்லர்ஜிகல் கோக், பெர்ரோ அலாய்ஸ் மற்றும் ஸிங்க் ஆகிய மூன்று பொருட்களுக்கான தற்போதுள்ள 5 சதவீத அடிப்படை இறக்குமதி வரி நீக்கப்படுகிறது.
பால் பவுடருக்கான வரி 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், வெண்ணை, எண்ணை மீதான இறக்குமதி வரி 40 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.
குடிநீர் வடி கட்டும் உபகரணங்களுக்கான 14 சதவீத இறக்குமதி வரி அடியோடு ரத்து செய்யப்படுகிறது.
எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 7 வருட வரிச்சலுகை காலம் 2009ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப் பதில், 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மொத்தத்தில் ரூ. 1500 கோடி அளவிலான வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.
சிமென்ட் மீதான விலையைக் கட்டுப்படுத்த சிமென்ட் மீதான வரியமைப்பு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஒரு டன் சிமென்ட் ரூ. 600க்கு விற்கப்படுகிறது. இனி 50 கிலோ கொண்ட ஒரு மூடை சிமென்ட் ரூ. 250க்கும் கூடுதலாக விதிக்கப்பட்டால், அதற்கு 12 சதவீத மதிப்பு அடிப்படையிலான வரி விதிக்கப்படும் என்றார் ப.சிதம்பரம்.