சட்டம்-ஒழுங்கு: அழகிரி மீதான அதிமுக வழக்கு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மாவட்டங்களில் அரசு நிர்வாகம் மு.க.அழகிரியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, நெல்லை, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் அரசு நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

இதனால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த மாவட்டங்களில் அரசு நிர்வாகத்தை கண்காணிக்க நேர்மையான பிரமுகர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி முகோபாத்தியா, நீதிபதி என்.பால்வசந்தகுமார் ஆகியோர் முதலில் விசாரித்தனர். அப்போது தலைமை செயலாளர் திரிபாதி இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்தார். அதில்,

நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கே உகந்ததல்ல. மு.க.அழகிரியின் கட்டுப்பாட்டினால்தான் தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக அரசு நிர்வாகத்தை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்றும் கோருவது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்.

அரசியல் லாபத்திற்காக பொதுநல வழக்கு என்ற பெயரில் இந்தக் கோர்ட்டில் அ.தி.மு.க. இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.

மு.க.அழகிரியின் கட்டுப்பாட்டில் அரசியல் நிர்வாகம் உள்ளது என்பதில் சிறிது கூட உண்மை இல்லை. அங்கு நடைபெறும் சமூக விரோத சம்பவங்களில் அழகிரிக்கு தொடர்பு உள்ளது என்று கூறுவதும் உண்மையானதல்ல.

வேண்டுமென்றே அ.தி.மு.க. தற்போதைய அரசு மீது அவதூறு கூறுகிறது. தற்போதுள்ள அரசுக்கு போட்டியாக, மற்றொரு அரசு நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தவறான குற்றச்சாட்டுகளை கூறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆகவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறிருந்தார்.

இந் நிலையில் இந்த வழக்கை நீதிபதி முகோபாத்தியா, நீதிபதி எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அதிமுகவின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்,

தென் மாவட்டங்களில் அரசு நிர்வாகத்தை கண்காணிக்க குழு நியமிக்க வேண்டுமென்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், எந்த சட்டப்பிரிவின் கீழ் இந்த கோரிக்கை எழுப்பினார் என்று தெளிவாகக் கூறவில்லை.

ஒருவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை மட்டும் பதிவு செய்யப்பட்டால் அதற்காக ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, மாவட்டத்திலோ, மாநிலத்திலோ சட்டம்-ஒழுங்கு இல்லை என்று குற்றம் சாட்ட முடியாது.

ஒவ்வொரு நாளும் போலீசார் பல குற்றச்சாட்டிற்காக பல்வேறு முதல் தகவல் அறிக்கைகளை ஆங்காங்கே பதிவு செய்கிறார்கள். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது.

ஆனால், மு.க.அழகிரி மீது ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்ற காரணத்திற்காக, இதை அடிப்படை முகாந்திரமாக கொண்டு அரசு நிர்வாகத்தை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்று கோருவதை ஏற்கமுடியாது.

மதுரையில் பத்திரிகை அலுவலகம் ஒன்று தாக்கப்பட்டது குறித்து தமிழக அரசே வெளிப்படையாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கை மனதில் வைத்து அரசு நிர்வாகத்தை கண்காணிக்க குழு நியமிக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை.

பத்திரிகை அலுவலகம் சம்பவத்தை தவிர (தினகரன் எரிப்பு) , குறிப்பிட்ட குற்றச்சாட்டு எதுவும் மனுவில் குறிப்பிடவில்லை. மேலும், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக ஆதாரங்களுடன் போலீசார் முன்போ, மாஜிஸ்திரேட்டு முன்போ எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஆகவே, மனுதாரரின் தெளிவற்ற குற்றச்சாட்டுகளை ஏற்க இக்கோர்ட்டு விரும்பவில்லை.
இந்த வழக்கை பொறுத்தவரை, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், அரசின் அமைப்புகள் செயலிழந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தெளிவற்றதாக உள்ளது.

எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+