புழுக்கத்தில் சென்னை: பெங்களூரில் சூறாவளி
சென்னை&பெங்களூர்: நர்கீஸ் புயல் சின்னம் தமிழகத்திலிருந்து திசை மாறிவிட்ட நிலையில் வளிமண்டலத்தில் உள்ள ஈரப் பதத்தையும் அறவே எடுத்துச் சென்று விட்டது. மேலும் தரைக் காற்றும் வீசாமல் வில்லை. இதன் காரணமாக, சென்னை நகரம் உள்ளிட்ட கடலோர தமிழகப் பகுதிகளில் கடும் புழுக்கம் நிலவி வருகிறது.
அதே நேரத்தில் திசை மாறிய நர்கீஸ் புயல் நேற்று மாலை பெங்களூரை பதம் பார்த்தது.
தமிழகம் அருகே வங்கக் கடலில் உருவான நர்கீஸ் புயல் திசை மாறிவிட்டதால் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகள் தப்பின. ஆனால், திசை மாறி பயணித்த இந்த புயலின் தாக்கத்தை பெங்களூர் நேற்று மாலை அனுபவித்தது.
பெங்களூரில் திடீரென வீசிய சூறாவளிக் காற்றால் பல பகுதிகளில் மரங்கள் பெயர்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. மரங்கள் விழுந்து பல கார்கள் சேதமடைந்தன.
பனிக் கட்டிகளுடன் மிக பலத்த சூறாவளியுடன் பெய்த பேய் மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இடி, மின்னலுடன் மிரட்டிய இந்த மழையால் தெற்கு பெங்களூரின் பல பகுதிகள் தண்ணீரில் மிதந்தன.
சென்னையில் கடும் புழுக்கம்:
இதற்கிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னையிலிருந்து வங்கக் கடலில் தென் கிழக்குப் பகுதியில், 700 கிலோமீட்டர் தொலைவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது.
புயலாக மாறியதால் அதற்கு நர்கீஸ் என பெயர் சூட்டப்பட்டது. சென்னை அருகே புயல் ஏற்பட்டு அது வடக்கு நோக்கி நகர்ந்து விட்டது. அப்படி புயல் நகர்ந்து செல்லும்போது ஈரப்பதத்தை எடுத்துச் சென்று விடும். அதேநேரம் தற்போது வெயில் காலம் என்பதாலும், மேகமூட்டம் அதிக அளவில் இருப்பதன் காரணமாகவும் பூமியிலிருந்து வெப்பம் வெளியேறுவதை தடுக்கிறது.
இதனால், வெயில் தாக்கமும், புழுக்கமும் அதிகம் இருக்கும். அடுத்த 24 மணி நேரங்களில் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக சென்னையில் கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications