தமிழகத்துக்கு 'நர்கீஸ்' புயலால் கிடைத்த மின்சாரம்!
சென்னை: சட்டசபையில் இன்று நர்கீஸ் புயல் குறித்து சுவாரசிய விவாதம் நடந்தது.
சட்டமன்றத்தில் இன்று கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது.
விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் ஜெயபால் பேசுகையில் பேசினார். அப்போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, வங்கக் கடலில் உருவான புயலுக்கு நர்கீஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.
பழம் பெரும் இந்தி நடிகை நர்கீஸ். அவர் மிகவும் அமைதியானவர் என்று கூறப்படுகிறது. கலையுலகில் பலரையும், பெரிதும் கவர்ந்த அந்த நடிகையின் பெயரை புயலுக்கு தேர்வு செய்தது சரியா? புயலுக்கு பெயர் சூட்டுவதை யார் முடிவு செய்வது? இந்த புயல் சின்னத்தால் வேகமாக காற்று வீசி உள்ளது. இதனால் அரசுக்கு மின்சாரம் கிடைத்ததா? என்றார்.
அப்போது குறுக்கிட்ட துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, இந்த புயலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தான் பெயர் சூட்டி இருக்கிறார்கள் என்றார்.
பின்னர் மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில், புயலுக்கு நர்கீஸ் பெயரை வானிலை நிபுணர்கள் தான் சூட்டி இருக்கிறார்கள். இந்த புயலுக்கு நர்கீஸ் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் புயல் அமைதியாக போய் விட்டது.
இந்த புயல் சின்னத்தால் காற்று பலமாக வீசியதன் மூலம் தினமும் அரசுக்கு ஆயிரம் மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின் உற்பத்தி கிடைத்துள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடையலாம் என்றார் ஆற்காடு வீராசாமி.












Click it and Unblock the Notifications