'டார்வின் கொள்கைப்படி குரங்குகளுக்கு பழம்'... அதிமுக
சென்னை: டார்வின் கொள்கைப்படி மனிதர்களின் மூதாதையர்கள் குரங்குகள். அந்த அடிப்படையில்தான் குரங்குகளுக்கு பழங்கள் கொடுக்கப்படுகிறதே தவிர மூடப்பழக்கத்தினால் அல்ல என சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, எம்.எல்.ஏக்கள் கேட்ட கேள்விக்கு வனத்துறை அமைச்சர் செல்வராஜ் பதிலளிக்கையில்,
சரணாலங்கள் அமைப்பதால் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் தடுக்கப்படுகின்றன. அங்கு போக்குவரத்துக்கு தனி அனுமதி பெற வேண்டிய சூழல் எழுகிறது. அப் பகுதியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்ய முடியாமல் போகிறது.
எனவே இனிமேல் புதிதாக சரணாலயங்கள் அமைப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இருக்கிற சரணாலயங்கள் அப்படியே பராமரிக்கப்படும். அவை விரிவாக்கமும் செய்யப்பட மாட்டாது.
குரங்குகளால் பெருத்த தொல்லை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை வெட்டுவதால், அவற்றில் வசிக்கும் குரங்குகள் ஊருக்குள் வருகின்றன.
சிலர் மூடப்பழக்க வழக்கம் காரணமாக அதை வணங்கும் விதத்தில் வாழைப்பழம் போன்றவற்றை கொடுத்து ஊக்கப்படுத்துகின்றனர்.
இதனால் நகரப் பகுதிகளிலும் அவற்றின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த குரங்குகளை துரத்தி அடிப்பதற்கான திட்டத்தை வனத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடுவேன் என்றார்.
மூடப்பழக்கமா?-பன்னீர்செல்வம்
அப்போது எழுந்த அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்,
டார்வின் கொள்கைப்படி மனிதர்களின் மூதாதையர்கள் குரங்குகள். அந்த அடிப்படையில்தான் குரங்குகளுக்கு பழங்கள் கொடுக்கப்படுகிறதே தவிர மூடப்பழக்கத்தினால் அல்ல.