மெட்ரிக் 10ம் வகுப்பு-ஆங்கிலத்தை திருத்த அறிவியல் ஆசிரியர்கள்!!!
சென்னை: மெட்ரிகுலேசன் 10ம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில விடைத் தாள்களை அறிவியல் ஆசிரியர்களை வைத்து திருத்த கல்வித்துறை முயன்று வருகிறது. இதற்கு பணிய ஆசிரியர்கள் மறுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேசன் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு பாடத்திற்கு உரிய விடைத்தாளை அந்த பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்த ஆசிரியர்கள்தான் திருத்துவது வழக்கம்.
ஆனால், சென்னை வேப்பேரியில் உள்ள பெண்டிங் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மெட்ரிகுலேசன் 10ம் வகுப்பு அறிவியல் விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்தது. இதையடுத்து அதே ஆசிரியர்களுக்கு ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணி தரப்பட்டது.
ஆனால் அந்த ஆசிரியர்கள் அறிவியல் படித்த நாங்கள் ஆங்கில விடைத் தாள்களை திருத்த மாட்டோம் என்று கூறிவிட்டனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,
பெண்டிங் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மெட்ரிகுலேசன் 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அறிவியல் விடைத் தாள்களை அறிவியல் படித்த ஆசிரியர்களாகிய நாங்கள் திருத்தினோம். அடுத்து ஆங்கிலம் 2ம் தாள்களை திருத்த எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் திருத்த மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்தோம்.
மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 10ம் வகுப்பில் ஆங்கிலம் கற்பித்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் தான் ஆங்கில விடைத் தாள்களை திருத்த வேண்டும். அது தான் சரி.
அறிவியல் படித்த நாங்கள் எப்படி ஆங்கில விடைத் தாள்களை திருத்துவது. இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். அந்தப் பாவம் எங்களுக்கு வேண்டாம். எனவே தான் நாங்கள் திருத்த மாட்டோம் என்று கூறிவிட்டோம் என்றனர்.
ஆனாலும் அறிவியல் ஆசிரியர்கள் யாராவது விருப்பம் இருந்தால் ஆங்கிலம் திருத்த வரலாம் என்று அதிகாரிகள் கூறி வருகின்றராம்.
அறிவியல் ஆசிரியர்களை வைத்து ஆங்கில பேப்பரை திருத்தினால் அவர்களால் நிச்சயம் தவறான மதிப்பீடு தான் செய்ய முடியும். இதனால் மாணவ, மாணவிகள் தான் பாதிக்கப்படுவர்.
எனவே அந்ததந்த பாடத்தின் விடைத்தாள்களை அதைக் கற்பித்த ஆசிரியர்களை வைத்து திருத்த அரசு நடவடிககை எடுப்பதே மாணவர்களின் நலனுக்கு நல்லது.
அரசு யோசிக்குமா?












Click it and Unblock the Notifications