ராகுலை பின்பற்ற பெனாசிர் மகனுக்கு இம்ரான் அட்வைஸ்
காத்மாண்டு: ராகுலை போல பெனாசிர் மகன் பிலாவலும் அரசியல் வாழ்க்கையை அடிப்படையில் இருந்து தொடங்க வேண்டும் என்று இம்ரன் கான் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வதியாகிவிட்ட இம்ரான் கான் அளித்துள்ள பேட்டியில்,
வீட்டையோ, நகையையோ பரம்பரை சொத்தாக்கலாம். ஒரு ஜனநாயக அரசியல் கட்சியை பரம்பரை சொத்துப்போல அறிவிப்பது ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் செயல். மக்களின் விருப்பங்களையும் கனவுகளையும் எப்படி பரம்பரை சொத்தாக்கலாம்?
இந்தியாவில் ராகுல் காந்தி செய்வதை போல கீழ்நிலையில் இருந்து அரசியல் வாழ்க்கையை பிலாவல் தொடங்கினால்தான் அவரது அரசியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பதவியில் தொடர சட்டரீதியான உரிமை முஷாரப்புக்கு இல்லை. அவர் எப்போதுமே தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
நாடாளுமன்றத்துக்குள் அவரை திணித்துக் கொண்டார். ஆனால் அந்த நாடாளுமன்றம் தற்போது இல்லை. தேர்தலுக்கு பிறகு அமைந்த நாடாளுமன்றத்தில் அவருக்கு அங்கீகாரம் இல்லை. எனவே அவர் பதவி விலக வேண்டும். தேர்தலில் நவாஸ் ஷெரீப்புக்கும், ஆசிப் அலி ஜர்தாரிக்கும் மிகப் பெரிய வாய்ப்பை மக்கள் அளித்துள்ளனர். அதை அவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பது போக போகத்தான் தெரியும்.
பிரபல விளையாட்டு வீரராக இருந்தும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்துக்கு என்னை அழைக்காதது எனக்கு வருத்தமில்லை. முஷாரப்புடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனக்கு வெறுப்பானதாகத்தான் இருக்கும் என்றார் இம்ரான்.