மதுரை மாநகராட்சியில் அஜண்டா கிழிப்பு-சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்
மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அஜண்டாவை கிழித்த மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் 3 பேர் சஸ்பென்ட் செய்யப்ட்டனர். இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் தேன்மொழி கோபபிநாதன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள், மன்ற அவசர கூட்ட அஜண்டாவில் ரூ.252 கோடிக்கு மழை நீர் வடிகால் திட்டத்திற்கு டெண்டர் ஒப்புதல் அளித்து வேலை உத்தரவு வழங்குவது உள்பட முக்கிய தீர்மானங்கள் உள்ளன.
அந்த அஜண்டாவை படிக்க கூட நேரம் இல்லாமல் நேற்று இரவுதான் கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று புகார் கூறினர்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் திடீரென்று அஜண்டாவை கிழித்தெறிந்தனர். இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் குரல் கொடுத்தனர்,
சிறிது நேரத்தில் அதிமுக, மார்க்சிஸ்ட், தேமுதிக, மதிமுக கவுன்சிலர்கள் மேயர் தேன்மொழி இருக்கையை முற்றுகையிட்டனர். இதையடுத்து மன்றம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது.
அப்போது பேசிய மேயர் தேன்மொழி, அஜண்டாவை கிழித்தது தவறு. மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் கணேசன், திலகர், செல்லம் ஆகியோர் அஜண்டாவை கிழித்தற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இதற்கு மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் மறுத்தனர். இதையடுத்து அவர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து, வெளியேற்ற சபை காவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். அவர்களை வெளியேற்ற காவலர்கள் முயன்றதில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் 7 பேரும் வெளியேறினர். சிறிது நேரம் கழித்து மீண்டும் வர முயன்றபோது, மன்ற காவலர்கள் அவர்களை வரவிடாமல் கதவை மூடினர்.
இதையடுத்து அவர்கள் 7 பேரும் மாநகராட்சி அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அங்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். தங்களை பேச விடாமல் தடுப்பதாக புகார் கூறி அதிமுக, மதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications