சென்னையில் மார்வாடியைக் கடத்தி ரூ.2 லட்சம் பறிப்பு
சென்னை: சென்னையில் மார்வாடியை கடத்தி ரூ. 2 லட்சத்தைப் பறித்துக் கொண்டு, அவரை மூட்டையில் கட்டி கடலுக்கு அருகே போட்டுவிட்டுப் போன கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மாதவரத்தைச் சேர்ந்த மார்வாடியான அனில்குமார் மணலியில் மணல் விற்பனை செய்து வருகிறார். கடந்த 29ம் தேதி இவர் திருவொற்றியூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்றார்.
ஆனால், அன்றிரவு வீடு திரும்பாததால் அவரது மனைவி பூஜா மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இரண்டு நாட்களாக அவரை தேடி வந்தனர்.
இந் நிலையில் நேற்று திருவொற்றியூர் கடலோர பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதிலிருந்து முனகல் சத்தம் கேட்டதையடுத்து மீனவர்கள் அதை பிரித்தனர்.
அதற்குள் அனில்குமார் ரத்த காயங்களுடன் இருந்தார். இதையடுத்து போலீசுரக்க தகவல் தெரிவித்துவிட்டு அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் அனில்குமாரிடம் விசாரி்த்தபோது,
கடந்த 29ம் தேதி ரூ.2.2 லட்சம் பணத்துடன் திருவொற்றியூர் சாத்தங்காடு சத்தியமூர்த்தி நகர் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றேன். அப்போது யாரோ கட்டையால் என் தலையின் பின்பக்கம் ஓங்கி அடித்தனர்.
அதில் மண்டை உடைந்து நான் மயங்கி விழுந்தேன்.
லேசாக மயக்கத்தில் இருந்த என்னை ஒரு காரில் தூக்கிப்போட்டு கடத்தி சென்றனர். எங்கோ ஒரு வீட்டில் என்னை அடைத்து வைத்தனர்.
நான் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு என்னை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி எடுத்து வந்து கடலுக்குள் போட முயன்றுள்ளனர்.
ஆனால் ஏனோ கடலோரத்திலேயே போட்டு விட்டு போய் விட்டனர் என்று கூறியுள்ளார்.