ரயில் தடம் புரண்டது-நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்
நாகர்கோவில்: திருவனந்தபுரம்-நாகர்கோவில் பாஸஞ்சர் ரயில் நேற்றிரவு தடம் புரண்டது. இதனால் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ், கொல்லம்-மதுரை ரயில், சென்னை-கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளன.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இச் சம்பவம் நடந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து வந்த அந்த ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின் அதை யார்டுக்கு கொண்டு சென்றனர்.
அப்போது ரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டுத் தாவின.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரித்தபோது சிக்னலே கிடைக்காத நிலையில் அந்த ரயிலை டிரைவர் இயக்கியதும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தால் நாகர்கோவில்-கன்னியாகுமரி, திருவனந்தபுரம் இடையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
அதே போல சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆரல்வாய்மொழியிலேயே நிறுத்தப்பட்டது. கொல்லம்-மதுரை ரயில் இரணியலிலும், சென்னை-கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வள்ளியூரிலும் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து வழியில் நிறுத்தப்பட்ட ரயில்களில் இருந்த பணிகளை நாகர்கோவிலுக்கு பஸ்களில் அழைத்து வர ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
தடம் புரண்ட பெட்டிகளை அகற்ற திருவனந்தபுரத்திலிருந்து கிரேன் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகலில் தான் போக்குவரத்து சீராகும் எனத் தெரிகிறது.
தண்டவாளத்தில் விரிசல்-பல்லவன் தப்பியது:
இந் நிலையில் இன்று காலை திருச்சி பொன்மலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை ரீப்பர்களுடன் இணைக்கும் போல்ட்டுகள் கழன்றிருப்பது தெரிவந்தது.
சரியான நேரத்தில் இந்த விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பவிருந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது.
தண்டவாளம் சீரமைக்கப்பட்ட பின் பல்லவன் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாக 7 மணிக்கு புறப்பட்டு தாமதமாக சென்னை போய் சேர்ந்தது.
அரக்கோணத்திலும்...:
அதே போல அரக்கோணம்- திருவள்ளுர் இடையே கடம்பத்தூர் ரயில் நிலைய பகுதியிலும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விரிசல் சரி செய்யப்பட்ட பின் ரயில்கள் இயக்கப்பட்டன.