சரப்ஜித் தண்டனை 3வது முறையாக ஒத்திவைப்பு-ஆயுளாக குறைக்க பாக் ஆலோசனை?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் சரப்ஜித்தின் தூக்கு தண்டனை 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க வாய்ப்புள்ளதாகவும், அதுதொடர்பாக அந்நாட்டு அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் கடந்த 1990ம் ஆண்டு நடந்த குண்டி வெடிப்பில் தொடர்பிருப்பதாக இந்தியா பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சரப்ஜித்சிங் கைது செய்யப்பட்டார். கடந்த 18 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருக்கும் சரப்ஜித்சிங்குக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏப்ரல் 30ம் தேதி தண்டனையை நிறைவேற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருணை அடிப்படையில் தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சரப்ஜித் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். இந்திய அரசும் பாகிஸ்தானிடம் இதை வலியுறுத்தியது. இதையடுத்து மே 1ம் தேதிக்கு தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டது.
சரப்ஜித் மீது கருணை காட்டும்படி பாகிஸ்தான் மனித உரிமைத்துறை முன்னாள் அமைச்சரும் மனித உரிமை ஆர்வலருமான அன்சாரி பர்னியும் அதிபர் முஷாரப்பிடம் கருணை மனு கொடுத்துள்ளார்.
அவரது முயற்சியால் சரப்ஜித்தை அவரது குடும்பத்தினர் 23ம் தேதி பாகிஸ்தான் சென்று சந்தித்து பேசினர். சரப்ஜித்தின் குடும்பத்தினர் இந்திய அரசு, அன்சாரி பர்னி ஆகியோர் சரப்ஜித்தை விடுவிக்க வேண்டும் என்று மீண்டும் கருணை மனு தாக்கல் செய்துள்ளனர்.
தற்போது பதவியேற்றுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, சரப்ஜித் மீது கருணை காட்டி மனுவையும் பரிசீலிக்கும், தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்தது.
இந்நிலையில் சரப்ஜித்தின் தூக்கு தண்டனை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை குறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் அவரை கடந்த 1ம் தேதி தூக்கிலிடவில்லை. தண்டனை நிறைவேற்றம் மற்றும் தேதி குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு லாகூர் துணை கமிஷனர் கடிதம் எழுதியுள்ளார் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இம்மாதம் பாகிஸ்தான் செல்லவிருக்கிறார். சரப்ஜித்தின் கருணை மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளும், பிரதமர் அலுவலமும் இதுகுறித்து உயர்மட்ட ஆலோசனையில் உள்ளது போன்ற காரணங்களுக்காக சரப்ஜித்தின் தண்டனை ஒத்திவைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே 2 முறை தண்டனை ஒத்தி வைக்கப்பட்டபோது தேதி குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது தேதி குறிப்பிடப்படாமல் தண்டனை ஒத்திவைக்கப்பட்டிருப்பதன் மூலம் சரப்ஜித்தின் தண்டனை ஆயுளாக குறைக்க வாய்ப்புள்ளதாக சரப்ஜித்தின் வழக்கறிஞர் ரானா ஹமீது தெரிவித்தார்.