மதுரை அருகே ஜல்லிக்கட்டு: 60 பேர் காயம்
மதுரை: மதுரை மேலூர் அருகே நடைபெற்ற ஜல்லிகட்டில் காளைகள் முட்டி வீரர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள முக்கம்பட்டி சிவநாயகி அம்மன் கோவில் திருவிழாவை நடந்து வருகிறது. இதை முன்னி்ட்டு அங்கு நேற்று ஜல்லிகட்டு நடந்தது.
இதில் மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கேட்டை, திண்டுக்கல் போன்ற பல மாவட்டங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்க முயன்றனர்.
இதில் காளைகள் முட்டி 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். வேடிக்கை பார்க்க வந்தவர்களில் 55 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காளைகளை அடக்கியவர்களுக்கு சைக்கிள், வெள்ளி காசு, அண்டா, குத்து விளக்கு போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண ஏராளமானோர் வந்திருந்தனர்.