மதுரை பாமக பிரமுகர் வீட்டில் மீண்டும் வெடிகுண்டுப் புதையல்!
மதுரை: மதுரை அவனியாபுரம் அருகே பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் இளஞ்செழியனின் தோட்ட இல்லத்தில் மீண்டும் பெருமளவிலான நாட்டு வெடிகுண்டுகள், சிவப்பு பாஸ்பரஸ், வேதிப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இளஞ்செழியனின் சகோதரர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் மாநில பாமக துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார். 8வது வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார்.
இதே பகுதியில் இவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு சில மாதங்களுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டு தயாரித்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி, சிவகாசி மாரீஸ்வரன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இருவரையும் படுகாயமடைந்த நிலையில் போலீஸார் கைது செய்தனற். இவர்களுக்கு ரகசிய சிகிச்சை அளித்த டாக்டர் ஞானகுருவும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் இளஞ்செழியனின் தோட்டத்தில் வெடிகுண்டுகள் புழங்குவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். அங்குள்ள ஒரு வாழை மரத்திற்குப் பின்னால் மண்ணுக்குள் நான்கு நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
ேமலும் வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் சல்பர், பாஸ்பரஸ் உள்ளிட்டவையும் இருந்தன. மேலும் சில வேதிப் பொருட்களும் காணப்பட்டன. அனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து உடனடியாக இளஞ்செழியனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர், இதுகுறித்து எனக்குத் தெரியாது. எனக்குப் பிடிக்காதவர்கள் செய்த சதி இது என்று கூறினார்.
இருப்பினும் இளஞ்செழியனை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இளஞ்செழியனின் சகோதரர் இருளப்பன், நண்பர்கள் முருகன், கருப்பு ஆகியோரை விருதுநகர் மாவட்டம் மெய்யனூத்துப் பட்டி அருகே வைத்துப் பிடித்து மதுரை கொண்டு வந்தனர்.
இவர்கள் 3 பேரையும் பெருங்குடி காவல் நிலையத்தில் ைவத்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
முன்னதாக பிடிபட்ட நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைத்து அழிக்கப்பட்டன.