நியாயம் கேட்ட பெண் வெட்டிக் கொலை
நெல்லை: நகை திருட்டு தொடர்பாக நடந்த ஊர்க் கூட்டத்தில் தனது பக்க நியாயத்தைப் பேசிய பெண்ணை, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது.
நெல்லை, பேட்டை அருகே திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி புஷ்பவல்லி. இவர்களது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 பவுன் நகை ஒன்று திருட்டு போனது. இதுகுறித்து இவர்கள் பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
இதற்கிடையே அதே ஊரை சேர்ந்த செல்வராஜ்தான் தங்கள் வீட்டில் நகையை திருடியதாகவும், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊர் தலைவர் சின்னகுட்டியிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து நாட்டாமை சின்னகுட்டி தலைமையில் ஊர் கூட்டம் நடந்தது. புகார் கொடுத்த குமரேசன், அவரது மனைவி புஷ்பவல்லி, மாமியார் ஆறுமுகத்தம்மாள் கூட்டத்திற்கு வந்திருந்தனர். நகையை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜூம் அங்கு வந்தார். இதில் இரு தரப்பினரும் மாறி மாறி பேசிக் கொண்டனர். கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று கூறிய புஷ்பவல்லி தன் கணவர் மற்றும் மாமியாரை அழைத்து கொண்டு வீடு திரும்பினார். புஷ்பவல்லி ஒரு தெரு வழியாகவும், கணவரும், மாமியாரும் மற்றொரு வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்திலிருந்த செல்வராஜ் இவர்களை பின்தொடர்ந்து வந்து புஷ்பவல்லியை ஓடஓடவிரட்டி சென்று சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் தனது வீட்டருகே விழுந்து இறந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு கணவரும், மாமியாரும் அங்கு ஓடிவந்தனர்.
அப்போது அங்கு நின்ற செல்வராஜ் அவர்களையும் வெட்டினார். இதில் இருவரும் பலத்த காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.