முல்லை பெரியாறு அணையில் 24ம் தேதி கேரள குழு ஆய்வு
கூடலூர்: முல்லை பெரியாறு அணையில் வரும் 24ம் தேதி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் குழுவினருடன் கேரள அரசு மீண்டும் ஆய்வு நடத்த உள்ளது.
142 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவிப்பதோடு நீர்மட்டத்தை உயர்த்தினால் அணைக்கு ஆபத்து என்றும் கூறி வருகிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் தமிழகத்திற்கு சாதகமான நிலையே இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து இடையூறு செய்து வரும் கேரள அரசு முல்லைப் பெரியாறு அருகே மேலும் ஒரு அணை கட்டப் போவதாக அறிவித்து அதற்கான இடத்தையும் தேர்வு செய்தது.
இதற்கிடையே அணையை கட்டிய என்ஜினீயர் பென்னிகுக்கின் உதவியாளரான மெகன்சி என்பவர் எழுதியுள்ள புத்தகம் மீண்டும் தமிழகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த புத்தகத்தில் தமிழகத்திற்கு எதிரான கருத்துக்கள் நிறைந்திருப்பதாகவும், அதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் குழுவுடன் மீண்டும் அணையில் ஆய்வு நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.
வரும் 24ம் தேதி முல்லைப் பெரியாறு அணைக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் குழு வருகிறது. அங்கு 3 நாட்கள் தங்கி பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்துகின்றனர்.
தமிழகத்துக்கு எதிராக மீண்டும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை கேரள அரசு ஊதிப் பெரிதாக்குவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.