முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ளது-துரைமுருகன்
சென்னை: முல்லைப்பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது. அதை யார் சென்று சோதித்தாலும் சோதித்துக் கொள்ளட்டும், அதுகுறித்து அர சுக்குக் கவலை இல்லை என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்விநேரத்தின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சிவபுண்ணியம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு துரைமுருகன் பதிலளிக்கையில், முல்லைப்பெரியாறு அணையை கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்கள் பார்வையிடுவதாக உறுப்பினர் கூறினார். அந்த அணையை யாரும் பார்க்கலாம். நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பார்ப்பதுபோல கேரள அமைச்சர்களும் பார்க்கலாம்.
உச்சநீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்களும் பார்க்கலாம். நீதிபதிகளே பார்த்தாலும் கூட அதைப்பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. இதில் நம்மிடம் ஒளிவு மறைவு ஏதுமில்லை.
அந்த அணை பலமாக உள்ளது என்று ஆயிரம் மேடைகளில் ஏறி சத்தியம் செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது என்றார் அமைச்சர் துரைமுருகன் என்றார் துரைமுருகன்.
'முட்டை' வாங்காத நாமக்கல்!:
கேள்வி நேரத்தின்போது துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி எழுந்து ஒரு கேள்வி கேட்டார். நாமக்கல் மாவட்டம் கல்வியில் உயர்ந்து வருவதாகவும், அங்கு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவமாணவியர் கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவதாகவும், நாமக்கல் நகரில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதற்குப் பதிலளித்த துரைமுருகன், எல்லோருக்கும் முட்டை வழங்குகிற நாமக்கல் மாவட்டம் கல்வியில் முட்டை வாங்காமல் மாணவ-மாணவியர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவது பாராட்டுக்குரியது என்று கூறினார்.
துரைமுருகனின் 'டைமிங்' பேச்சைக் கேட்டு அவையே சிரிப்பால் குலுங்கியது.












Click it and Unblock the Notifications