பிறந்தது புதுக் கட்சி பெரியார் அதிமுக!
சென்னை: மதிமுகவிலிருந்து விலகிய சிலர் என்.எஸ்.தேவன் என்பவர் தலைமையில் பெரியார் அதிமுக என்ற புதுக் கட்சியைத் தொடங்கியுள்ளனர்.
திமுகவிலிருந்து பிறந்தது அதிமுக. பின்னர் வந்தது மதிமுக. இப்போது மதிமுகவிலிருந்து பிரிந்த சிலர் சேர்ந்து பெரியார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளனர்.
இந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராக என்.எஸ்.தேவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று பிறந்த இக்கட்சி குறித்து தேவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கொள்கை மற்றும் நேர்மையை காப்பாற்றத் தவறிவிட்டார். என்று கொள்கையை வைகோ விட்டாரோ, அப்போதே நாங்களும் விலகி விட்டோம்.
உட்கட்சி பூசலை தீர்க்க வைகோ தவறிவிட்டார். எனவே நாங்கள் அங்கு இருக்க விரும்பவில்லை. தனி நபர்களுக்குத்தான் மதிமுகவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதுகுறித்து வைகோவிடம் கேட்டோம். ஆனால் அவர் சரிவர பதில் தரவில்லை.
எனவேதான் பெரியார், அண்ணா பெயரில் பெ.அ.தி.மு.க. என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளோம்.
மேலே கருப்பு - கீழே கருப்பு - நடுவில் சிவப்பு:
எங்களது கட்சிக் கொடி மேலே மற்றும் கீழே கருப்பு நிறமும், நடுவில் சிவப்பும் கொண்டதாக இருக்கும்.
கட்சியின் பொதுச் செயலாளராக வெங்கட் செயல்படுவார். சுரேஷ்பாபு பொருளாளர். துணைச் செயலாளர்களாக சங்கர், குப்புசாமி ஆகியோர் செயல்படுவார்கள்.
சென்னையில் மட்டும் 100 பேர் சேர்ந்து இக்கட்சியைத் தொடங்கியுள்ளோம். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள மதிமுக அதிருப்தியாளர்கள் எங்களது கட்சியில் இணைவர்.
எங்களது கட்சிக் கொள்கைகளை, அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்படும் பொதுக் கூட்டத்தில் விளக்கிக் கூறப் போகிறோம் என்றார் தேவன்.












Click it and Unblock the Notifications