மத்திய மாநில அரசுகள் மீது மக்கள் வெறுப்பு-வைகோ
மதுரை: விலைவாசி உயர்வால் மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
விலைவாசி உயர்வால் மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நுகர்வோர் மட்டுமல்ல விவசாயிகள், வியாபாரிகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.
பன்னாட்டு கம்பெனிகள், பெருமுதலாளிகள் தான் பயன்பெறுகின்றனர்.
ஓகேனக்கல் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தது மன்னிக்க முடியாத துரோகம். அவரைப் போல எந்த முதல்வரும் தமிழக உரிமையை விட்டுத் தந்ததில்லை. இந்தப் பிரச்னையில் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்டுகள் கூட அவரை கண்டிக்கவில்லை. இதனை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கைக்கு இந்தியா நிதியுதவி செய்யக் கூடாது. இலங்கையின் மனித உரிமை மீறலை ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வருவதையும் இந்தியா எதிர்ப்பது இலங்கை தமிழருக்கு இந்தியா செய்யும் துரோகம்.
போர் நிறுத்தத்தை இலங்கை அரசுதான் அறிவிக்க வேண்டும். அவர்கள் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கினாலும் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த முடியாது.
நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வருவது, இடதுசாரிகளின் கையில்தான் உள்ளது என்றார் வைகோ.