திருப்பரங்குன்றத்துக்கு ஒரு நியாயம்.. கோவில் நிலத்துக்கு ஒரு நியாயமா? அரசை கேட்கும் ராம.ரவிக்குமார்!
சென்னை: திருப்பரங்குன்றம் வழக்கில் மேல்முறையீடு செய்யும் தமிழக அரசு, மறுபுறம் கோயில் இனாம் நிலங்களுக்கு அவசரமாக பட்டா வழங்க உத்தரவிடுவது ஏன்? என இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழக அரசு ஒரு புறம் திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, கோயில் சொத்துகள் மற்றும் கோயில் உரிமைகளைப் பாதுகாக்கிறோம் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

ஆனால் அதே அரசு, மறுபுறம் கோயில்களுடன் தொடர்புடைய இனாம் நிலங்களுக்கு அவசரகதியில் பட்டா வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகப்பெரிய முரண்பாடாகும். கோயில் நிலங்கள் என்றாலே அனைத்தும் ஒரே வகை அல்ல.
நேரடியாக கோயிலின் உடைமையாக இருந்த தேவதான நிலங்கள் ஒரு வகை. கோயில் பூஜை, நந்தவனம், ஓதுவார், அர்ச்சகர், மடங்கள், தர்மபரிபாலனங்கள் போன்ற சேவைகளுக்காக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள் மற்றொரு வகை. ஒவ்வொரு நிலத்தின் சட்ட வரலாறும் தனித்தனியாக ஆராயப்பட வேண்டியது அவசியம்.1950-1960 காலகட்டங்களில் பல இனாம் நிலங்களுக்கு அரசே பட்டா வழங்கியது. அதன் பின்னர் அவை பலமுறை விற்பனை செய்யப்பட்டு, பல தலைமுறைகளாக கைமாறியுள்ளன.
இத்தகைய நிலங்களை இன்று மீண்டும் ஒரே அடியாக "கோயில் நிலம்" என்ற பெயரில் விவாதத்திற்கு கொண்டு வருவது சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும். அதே நேரத்தில், கடந்த 10-20 ஆண்டுகளில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து, வாடகை செலுத்தாமல் அனுபவித்து வருபவர்கள் தொடர்பான பிரச்சினையும் முற்றிலும் வேறுபட்டது. இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒன்றாகக் கலந்து காட்டுவது உண்மையை மறைக்கும் செயல்.
தமிழக அரசிடம் சில நேர்மையான கேள்விகள் எழுகின்றன:
* திருப்பரங்குன்றம் வழக்கில் கோயில் உரிமையை நீதிமன்றத்தில் வலியுறுத்தும் அரசு, கோயில் இனாம் நிலங்களுக்கு மட்டும் ஏன் அவசரமாக பட்டா வழங்குகிறது?
* 60 ஆண்டுகளுக்கு முன்பு அரசே வழங்கிய பட்டா நிலங்களையும், சமீபத்திய சட்டவிரோத ஆக்கிரமிப்புகளையும் ஒன்றாகக் கலப்பதன் நோக்கம் என்ன?
* வக்பு வாரியச் சொத்துகளை ஆக்கிரமித்தவர்களுக்கு இதுபோன்ற சிறப்பு பட்டா வழங்கப்பட்டதா?
* கிறிஸ்தவ திருச்சபை சொத்துகளை ஆக்கிரமித்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டதா?
* ஏன் இந்த அவசரம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில் நிலங்களுக்கு மட்டும்?
இது உண்மையில் நிலச் சீர்திருத்தமா? அல்லது குறிப்பிட்ட தரப்பினரின் அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றும் முயற்சியா? என்ற சந்தேகம் எழுகிறது. அரசு உண்மையாகவே கோயில் சொத்துகளை மீட்க விரும்பினால், தனியாரிடம் உள்ள நிலங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடவடிக்கை எடுப்பது போதாது. பல தசாப்தங்களாக அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பிற பொதுப் பயன்பாட்டு கட்டிடங்கள் அமைந்துள்ள கோயில் நிலங்கள் பற்றியும் ஒரே அளவுகோலுடன் செயல்பட வேண்டும். ஒரே சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும்.
மேலும், தமிழக அரசு உடனடியாக மாநிலம் முழுவதும் உள்ள கோயில் சொத்துகளின் முழுமையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
அதில்:
- நேரடி கோயில் நிலங்கள் எவ்வளவு?
- இனாம் நிலங்கள் எவ்வளவு?
- யாருக்கு, எந்தச் சட்டத்தின் கீழ், எந்த ஆண்டு பட்டா வழங்கப்பட்டது?
- எத்தனை நிலங்கள் தற்போது குத்தகையில் உள்ளன?
- எத்தனை நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன?
- எத்தனை நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன?
- கோயில்களின் உண்டியல் வருமானம், நகைகள், தானங்கள், முதலீடுகள் மற்றும் அவற்றின் பயன்பாடு என்ன? என்பன அனைத்தும் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.
கோயில் நிர்வாகம் என்பது வெறும் நிலப் பிரச்சினை மட்டுமல்ல. கோயில்களின் சொத்துகள், வருவாய், நகைகள், காணிக்கைகள், குத்தகைகள் அனைத்தும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்கப்பட வேண்டும். மக்களின் நம்பிக்கையும், பக்தர்களின் காணிக்கையும் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது.
தமிழக அரசு உண்மையில் நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட விரும்பினால், இந்து கோயில்களுக்கு மட்டும் தனி அணுகுமுறையையும், பிற மத அமைப்புகளுக்கு வேறு அணுகுமுறையையும் பின்பற்றக் கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே இந்திய அரசியலமைப்பின் அடிப்படை.
எனவே, கோயில் இனாம் நிலங்கள் தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மையுடனும், சட்ட நிபுணர்கள், வருவாய்த் துறை, அறநிலையத் துறை, வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆலோசனையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும். அவசர அரசாணைகள் மூலம் பல தசாப்தங்களாக நிலவி வரும் சிக்கல்களை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்." என கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications