சென்னை தங்கக் காசு மோசடியில் ஜெயசுதாவுக்கும் தொடர்பு?
ஹைதராபாத்: சென்னையைக் கலக்கி வரும் தங்கக் காசு மோசடியில் நடிகை ஜெயசுதா உள்ளிட்ட பல தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் இயங்கி வந்த கோல்ட் குவெஸ்ட் என்கிற நிறுவனம் மோசடியான முறையில் ஆயிரக்கணக்கானோரிடம் பண மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடித் திட்டத்தில் பல தமிழ் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தினசரி புகார் கொடுத்தவண்ணம் உள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மோசடியில் தெலுங்குப் பட நடிகர், நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது.
நடிகை ஜெயசுதா, நடிகர் சந்திரமோகன், அவரது மனைவி ஜலந்தரா, நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மனைவி ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்தின் ஏஜென்டுகளாக செயல்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த மோசடி குறித்து நடிகர் சந்திரமோகன் தெலுங்கு டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்த நிறுவனம் மோசடி நிறுவனம் அல்ல. சிலர் கூறும் புகாரை வைத்து அப்படி முடிவுக்கு வந்து விடக் கூடாது.
இந்த நிறுவனத்தால் நாங்கள் பலனடைந்தோம் என்பது உண்மைதான். அதேசமயம், ஏராளமான பொதுமக்களும் லாபம் அடைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கியப் புள்ளி வெளிநாட்டில் பதுங்கியுள்ளார். தமிழகத்தைத் தாண்டி மோசடி விரிவடைந்திருப்பதாக ெதரிகிறது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.