10ம் தேதி முதல் பி.இ. விண்ணப்பங்கள் வினியோகம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கான பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வருகிற 10ம் தேதி முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. இந்த நிலையில் பி.இ. விண்ணப்பங்கள் விற்பனை வருகிற 10ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகத்திற்குத் தயாராக உள்ளன.
அரசு பொறியியல் கல்லூரிகள் உள்பட தமிழகத்தில் 260 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும் 65 ஆயிரம் ஆகும். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 38 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டும் மேலும் பல பொறியியல் கல்லூரிகள் செயல்படவுள்ளன. எனவே மாணவர் இடங்கள் கூடுதலாகும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் 10ம் தேதி முதல் பி.இ. விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்குகிறது. சென்னை, கோவை, திருச்சி, நெல்லை அண்ணா பல்கலைக்கழகங்களிலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளிலும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகத்திற்குத் தயாராக உள்ளன. ரூ. 500 கட்டணம் செலுத்தி நேரடியாக விண்ணப்பத்தைப் பெறலாம். அல்லது டிடி மூலமாகவும், விண்ணப்பத்தைப் பெறலாம்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 250க்கு விண்ணப்பம் வழங்கப்படும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மொத்தம் 15 கவுண்டர்கள் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.