உத்தபுரம்-மலையில் தங்கியுள்ளவர்களுடன் கலெக்டர் இன்று பேச்சு
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தபுரம் கிராமத்தில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டதைக் கண்டித்து மலையில் குடிபுகுந்துள்ள உயர் ஜாதியினருடன் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
உத்தபுரம் கிராமத்தில் கடந்த 1989ம் ஆண்டு நடந்த ஜாதிக் கலவரத்திற்குப் பிறகு அங்கு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இதனால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. எங்கு போவதாக இருந்தாலும் சுவரைச் சுற்றி நீண்ட தூரம் பயணிக்க நேரிட்டது.
இதையடுத்து சுவரை இடிக்க வேண்டும் என்று சமீப காலமாக அங்கு போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. சுவரை இடிக்க, அதை எழுப்பியவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து அரசு அதிரடியாக சுவரை இடித்து வழி ஏற்படுத்தியது.
இதைக் கண்டித்து சுவர் எழுப்பிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊரைக் காலி செய்து விட்டு குடும்பத்தினருடன் அருகில் உள்ள தாழையூத்து மலைப் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். அங்குள்ள அடிவாரத்தில் அவர்கள் தங்கியுள்ளனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத இடத்தில் அவர்கள் தங்கியிருப்பதால் அவர்களை சமாதானப்படுத்த போலீஸாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
5 நிபந்தனைகள்:
அப்போது ஊர் மக்கள் சார்பில் இடித்த சுவரை மீண்டும் கட்டித் தர வேண்டும், மாரியம்மன் கோவில் நிலத்திற்குப் பட்டா தர வேண்டும், 89ம் ஆண்டு ஜாதிக் கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து நிபந்தனைகளை அவர்கள் விதித்தனர்.
இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் தாழையூத்து ெசன்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் மலைப் பகுதியில் தங்கியிருக்கும் 400க்கும் மேற்பட்டோர் நனைய நேரிட்டது. இருப்பினும் தங்களது கொள்கையில் அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர். சுவர் மீண்டும் கட்டப்பட்டால்தான் மலையிலிருந்து இறங்குவோம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
எழுமலையில் போராட்டம்:
இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையில், மலையில் தங்கியிருக்கும் சமூகத்தினருக்கு ஆதரவு தெரிவித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நூற்றுக்கணக்கானோர் திரண்டு காவல் நிலையம் முன்பு கூடி போராட்டம் நடத்தினர். மேலும் எழுமலையில் கடையடைப்பும் நடத்தப்பட்டது. கண்டன ஊர்வலமும் நடத்தப்பட்டது.
பஸ்கள் நிறுத்தம்:
இதற்கிடையே, பேரையூர், எழுமலையிலிருந்து உசிலம்பட்டிக்கு பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.