எம்எல்ஏக்களுக்கு கருணாநிதி விருந்து-அதிமுக, மதிமுக, தேமுதிக புறக்கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவடைவதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்தளித்தார். இந்த விருந்தில் அதிமுக, மதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி நிறைவு பெறுகிறது. இதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் கருணாநிதி நேற்றிரவு விருந்தளித்தார்.
நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விருந்தில் சபாநாயகர் ஆவுடையப்பன், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், அமைச்சர்கள் அன்பழகன், ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் முதல்வர் கருணாநிதியுடன் ஒரே வரிசையில் அமர்ந்து விருந்துண்டனர்.
துரைமுருகன், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், சட்டசபை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ கோவிந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ சிவபுண்ணியம் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆகியோர் விருந்தில் கலந்து கொண்டனர்.
தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி, டி.ஜி.பி. ஜெயின், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் சந்தானம் உள்ளிட்ட துறை செயலர்கள், காவல்துறை அதிகாரிகளும் விருந்தில் கலந்து கொண்டனர்.
அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர். அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் விருந்துக்கு வரவில்லை.
விருந்தில் 20க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன. கோழி பிரியாணி, மீன் வறுவல், நான், புலாவு, பரோட்டா, சூப் உள்ளிட்டவை இதில் அடக்கம். சைவ உணவும் பரிமாறப்பட்டது.
விருந்துக்குப் பின்னர் ஐஸ் க்ரீம், ப்ரூட் சாலட், ஜூஸ், கேக், பால் பாயாசம் உள்ளிட்டவை தரப்பட்டன.
முதல்வர் சார்பில், விருந்துக்கு வந்தவர்களை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வரவேற்று உபசரித்தார்.