வடலூரில் அருள் ஜோதி பல்கலை.- பொள்ளாச்சி மகாலிங்கம் கோரிக்கை
கடலூர்: அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்ற உயரிய தத்துவத்தை அளித்த வள்ளலார் அவதரித்த வடலூரில் அருள் ஜோதி பல்கலைக்கழகத்தை அரசு தொடங்க வேண்டும் என்று வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய தலைவரும், கல்வியாளரும், தொழிலதிபருமான பொள்ளாச்சி மகாலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடலூரில் உள்ள ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பி.எட் பட்டமளிப்பு விழா வடலூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் தலைமை தாங்கினார். ஓபிஆர் கல்வி மைய தாளாளர் செல்வராஜ் வரவேற்புரை நிகழ்த்த, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.
பொள்ளாச்சி மகாலிங்கம் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு சென்னை மாகாண பிரதமராக இருந்த ஒ.பி.ஆர். அரசியலில் கருத்து வேறுபாடுகள் காரணமாகச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டு வடலூர் வந்து கல்வி நிறுவனத்தை 1951ம் ஆண்டு துவங்கினார்.
இவருடன் சுதந்திரத் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் தங்கள் பகுதிகளில் கல்வி சேவைகளில் ஈடுபட்டனர். வேதாரண்யம் வேதரத்னம் பெண்களுக்கு கல்வி நிறுவனம் துவங்கி ஆயிரம் ஏழை பெண்களைப் படிக்க வைத்தார். அவர்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சியளித்தனர். பின்னர் அவர்களுக்குத் திருமணம் நடத்தி வைத்தார்.
வடலூரில் ஒ.பி.ஆர். துவக்கிய தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. 1969ம் ஆண்டு கல்வி நிறுவனங்களை என்னிடம் ஒப்படைத்தார். இதன் பிறகு உயர்நிலைப் பள்ளி மேல் நிலைப் பள்ளியாக உயர்ந்தது.
தற்போது கல்லூரித் தாளாளர் செல்வராஜ் செயல்பாட்டில் செவிலியர் படிப்பு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, கல்வியியல் கல்லூரி என இந்த கல்வி மையம் விரிவடைந்துள்ளது. வரும் ஆண்டில் எம்.எஸ்.சி., முதுநிலைப் படிப்பும் கொண்டு வரப்படும்.
வடலூரை உலக கல்வி வரைபடத்தில் இடம் பெற வைக்கும் வகையில், வடலூரில் அருள் ஜோதி பல்கலைக்கழகத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 10 புதிய பல்கலைக்கழங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதே போன்று அடுத்த ஆண்டு வடலூரிலும் பல்கலைக்கழகம் துவங்க வேண்டும். இதற்கான இடம் இங்கு உள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் சுத்த சன்மார்க்க நிலையம், வடலூரில் உள்ள கல்வி நிறுவனங்கள் கருங்குழியில் உள்ள வள்ளலார் இல்லம் ஆகியவை இயங்க வேண்டும்.
ஒ.பி.ஆரின் கனவுகளை நினைவாக்கும் பணியைத் தொடர்ந்து செய்வோம் என்றார் பொள்ளாச்சி மகாலிங்கம்.
நிகழ்ச்சியில் வடலூர் சுத்த சன்மார்க்க சங்க துணைத் தலைவர் ஊரன் அடிகள் வாழ்த்துரை வழங்கினார்.