For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐசிசி பதவியை தூக்கியெறிந்தார் காவஸ்கர்

By Staff
Google Oneindia Tamil News

Gavaskar
துபாய்: ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து இந்திய மாஜி கேப்டன் காவஸ்கர் விலகியுள்ளார்.

துபாயில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வருடாந்திர கூட்டம் காவஸ்கர் தலைமையில் நேற்று நடந்தது. ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர் மீடியாக்களிலும் பணியாற்றுவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கடந்த மாதம் ஐசிசி தலைமை செயல் அதிகாரி மால்கம் ஸ்பீடை துபாயில் சந்தித்தபோதும் இந்த பிரச்னை பற்றி காவஸ்கருக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் நடப்பு வருடாந்திரக் கூட்டத்துக்கு காவஸ்கரே தலைமை வகிப்பது என்றும் அதற்கு பிறகு எந்த முடிவையும் அவர் எடுக்கலாம் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி வருடாந்திர கூட்டம் நடந்த மறுநாளே தனது முடிவை காவஸ்கர் அறிவித்துள்ளார். காவஸ்கரின் இந்த முடிவை ஐசிசி நிர்வாகக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இது பற்றி நிர்வாகக்குழு தலைமை செயல் அதிகாரியாக தாற்காலிக பொறுப்பு வகிக்கும் டேவிட் ரிச்சர்ட்ஸன் கூறுகையில்,ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக இருந்து காவஸ்கர் ஆற்றிய சிறப்பான பணிக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

அவரது 8 ஆண்டுகால தலைவர் பணி மட்டுமல்லாமல் அதற்கு முன்பு இதே கமிட்டி உறுப்பினராக இருந்த 6 ஆண்டுகளிலும் தனது பழுத்த அனுபவத்தை பயன்படுத்தி கிரிக்கெட் முன்னேற்றத்துக்காக உழைத்தார்.

அவரைப்போன்ற அனுபவசாலிகளை வைத்துக்கொண்டால் கிரிக்கெட் முன்னேற்றத்துக்கு நல்லது. ஐசிசியுடன் அவரது நீண்டகால தொடர்பை வைத்துப் பார்க்கும்போது எதிர்காலத்தில் வேறு ஏதாவது ஒருவகையில் அவரது சேவையைப் பயன்படுத்திக் கொள்வோம் என்றார்.

காவஸ்கர் கூறுகையில், எனது எட்டு ஆண்டு பதவிக்காலத்தில் முழு சந்தோஷத்துடனே பணியாற்றினேன். கிரிக்கெட்டுக்கு என்னால் ஆனமட்டும் செய்யக்கூடிய நன்மையை இந்த கௌரவப் பதவியின் மூலம் செய்துவிட்ட மனநிறைவு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் கிரிக்கெட் போட்டிகள் அதிகஅளவில் நடக்கத் தொடங்கியுள்ளநிலையில் என்னால் ஒரே நேரத்தில் இரட்டைப் பதவிகளில் நீடிப்பது முடியாத காரியம் என்பதை புரிந்துகொண்டேன். ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராகவும் இருந்துகொண்டு மீடியாக்களுக்கு அளித்த உத்தரவாதங்களையும் காப்பது முடியாத காரியமாகிவிடும்.

இப்படியெல்லாம் நேரும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பே உணர்ந்துகொண்டேன். ஐசிசி பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்று அப்போது கூறியபோதும் என்னை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்தினார்கள்.

ஆனால் இப்போது என்னால் ஒரே சமயத்தில் இரட்டை பணிகளை செய்வது இயலாத காரியம் என்பது தெளிவாகிவிட்ட நிலையில் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளேன் என்றார்.

இந்தியாவுக்கு எதிரான ஐசிசி முடிவுக்கு கட்டுரையாளராக காவஸ்கர் எதிர்ப்பு தெரிவித்த கருத்தை மால்கம் ஸ்பீடு பகிரங்கமாக விமரிசனம் செய்தார். இந்த பனிப்போரில் காவஸ்கர் பதவி சர்ச்சை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X