இலங்கை பிரச்சனைக்கு போர் தீர்வல்ல-ராமதாசுக்கு முகர்ஜி கடிதம்
சென்னை: இலங்கை இனப் பிரச்சனைக்கு போர் மூலம் தீர்வு இருக்க முடியாது என வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை குறித்த நமது கொள்கை, இனப் பிரச்சனைக்கு போர் மூலம் தீர்வு இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
அந்த நாட்டில் வன்முறையையும் மக்களின் துன்பத்தையும் குறைக்க வழிவகுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் வரவேற்கத்தக்கதே. அமைதிப் பேச்சு மூலம் தீர்வு காண்பதில் தான் முன்னேற்றத்திற்கான வழி
அடங்கி இருக்கிறது.
அத்தகைய தீர்வு ஒன்றின் மூலமாக மட்டுமே, இடர்பாடுகளுக்கு உள்ளாகியிருக்கும் அந்த நாட்டில் நிலைத்த அமைதியை ஏற்படுத்த முடியும்.
நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் தேவையை நாங்களும் முற்றிலும் உணர்ந்திருக்கிறோம். இதை முன்னுரிமை அடிப்படையில் இலங்கையின் கவனத்திற்கு அரசு எடுத்து சென்றுள்ளது.
எனினும் நமது மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூடுகள் அல்லது அவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் பெரும்பாலும் இலங்கையின் கடல் பகுதியில் தான் நிகழ்ந்துள்ளன.
நமது மீனவர்கள் பன்னாட்டுக் கடல் எல்லைக்கோட்டை மதித்து நடக்க வேண்டியது முக்கியம். கட்டுப்பாட்டுடன் செயல்படுமாறும், நமது மீனவர்களை மனித நேயத்துடன் நடத்துமாறும், இலங்கை கடற்படையிடம் தெரிவித்திருக்கிறோம்.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications