கொட்டும் மழையில் உத்தபுரம் மக்கள் வீறாப்பு
மதுரை: உத்தபுரம் கிராமத்தில் சர்ச்சைக்குரிய தடுப்புச் சுவரை இடித்ததை கண்டித்து கிராமத்தைவிட்டு வெளியேறிய மக்கள் தொடர்ந்து வீம்பு பிடித்து வருகின்றனர்.
மதுரை அருகே உத்தபுரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்பையும், மற்ற வகுப்பினர்கள் வசிக்கும் இடத்துக்கும் நடுவில் பொது இடத்தில் அமைப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய தடுப்புச்சுவரை தமிழக அரசு உத்தரவையடுத்து மாவட்ட நிர்வாகம் இடித்துத் தள்ளியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தப்புரம் கிராமத்தினர் பலர் கிராமத்தை விட்டு வெளியேறி அருகில் இருந்த தாழையூ்தது மலையடிவாரத்தில் சென்று கடந்த சில நாட்களாக தங்கியுள்ளனர். இந்த பிரச்னையைக் கைவிடுமாறு மதுரை கலெக்டர் ஜவஹர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த கிராமத்தினரிடம் கலெக்டர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பினருடன் கடந்த 1989ல் நடந்த மோதலையடுத்து இந்த தடுப்பு சுவர் கட்டப்பட்டதாகவும், இந்த பிரச்னைக்கு மூலகாரணமான முத்தாலம்மன் கோயிலுக்கு தங்கள் சமூகத்துக்கு பட்டா ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நிரந்தர காவல்நிலையம் அமைக்கவேண்டும் என்றும் ஒரு பிரிவினர் கோரினர்.
இதற்கு கிராமத்தில் இருந்த வேறு சில ஜாதியினரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து முத்தாலம்மன் கோயிலுக்கு உடனடியாக பட்டா வழங்குவது குறித்து அரசு பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று ஜவஹர் உறுதியளித்தார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்று ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முத்தாலம்மன் கோயிலுக்கு உடனடியாக பட்டா வழங்காதவரை திரும்பிவரப்போவதில்லை என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை அப்பகுதியில் திடீர் மழை பெய்தது. தகவல் அறிந்து மக்கள் உதவிக்காக மதுரையில் இருந்து 2 ஆம்புலன்ஸ்களில் மருத்துவக்குழுவினர் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications