போனில் உறவினருக்கு சிபாரிசு: அமைச்சர் பூங்கோதை விலகல்
சென்னை: ஏடிஜிபியுடன் போனில் சிபாரிசு செய்த பேச்சு வெளியான விவகாரத்தையடுத்து தமிழக சமூகநலத்துறை அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளார். இந்த தகவலை முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி உபாத்யாயாவுடன் அமைச்சர் பூங்கோதை பேசிய விவகாரம் சட்டசபையில் இன்று எழுப்பப்பட்டது. அப்போது தன்னிடம் அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா கடிதம் அளித்திருப்பதாகவும் இதுபற்றி விசாரித்து முடிவெடுக்கப்படும் என்றும் கருணாநிதி பதில் அளித்தார்.
முன்னதாக, லஞ்ச வழக்கில் உறவினரை காப்பாற்ற ஏடிஜிபியுடன் அமைச்சர் பூங்கோதை சிபாரிசு செய்து பேசியதாக ஆதாரத்துடன் சிடி வெளியிட்டு ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஏடிஜிபி உபாத்யாயாவுடன் முதல்வரின் செயலர் பேசியது ஒட்டுக் கேட்பதாக எழுந்த புகார் குறித்து சண்முகம் கமிஷன் இன்று விசாரணை நடத்துகிறது. இந்நிலையில் ஏடிஜிபி உபாத்யாயாவுடன் அமைச்சர் பூங்கோதை பேசியதாக சிடி ஆதாரத்தை சுப்ரமணிய சாமி வெளியிட்டார்.
அந்த சிடியில் அமைச்சர் பூங்கோதை, (தனது உறவினர்)ஜவஹர் ஒரு துரதிர்ஷ்டசாலி. அவர் குடும்பம் அவர் வருமானத்தை நம்பிதான் உள்ளது. அவர் என் அப்பாவின் சொந்த அக்கா மகன். இந்த வழக்கில் அவர் மீது கடும் நடவடிக்கை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். வழக்கை மின்வாரியத்துக்கு மாற்றிவிடுங்கள். பிறகு அவர்கள் கவனித்து கொள்வார்கள் என்று பேசியிருப்பது பதிவாகியுள்ளது.
இந்த சிடி ஆதாரத்தை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடம் அளித்து பூங்கோதையை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தப்போவதாகவும் சுப்ரமணிய சாமி கூறியிருந்தார்.